மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை
சென்னை, ஜூலை 26–- ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது, பாஜக அரசின் பின்னடைவுக்கான துவக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (25.7.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாகவே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன. அவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பிரயோகிக்கப்பட்டதோடு, தேசவிரோத குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்
இத்தகைய அடக்குமுறைகளையும் தாண்டி, பாலினம், மதம் மற்றும் ஜாதி பேதங்களைக் கடந்து மாணவர்கள் திரண்டு காட்டிய உறுதியே ஆட்சியாளர்களை பணிய வைத்து, அமைச்சரை பதவி விலகச் செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது வெறும் நிர்வாக ரீதியான தோல்வி மட்டுமல்ல; அது கல்வியை வணிகமயமாக்கியதன் நேரடி வெளிப்பாடாகும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மய்யங்கள் பெரும் தொழிலாக உருவெடுத்ததும், அதன் விளைவாகவே வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் நடப்பதும் தான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். எனவே, நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடியுள்ளன. தர்மேந்திர பிரதானின் இந்த பதவி விலகல், பாஜக ஆட்சிக்கான பின்னடைவின் துவக்கமாகும். இவ்வாறு பெ.சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
