பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 545 லோக்கல் வங்கி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வங்கியாக உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது.. அரசு பொதுத்துறை வங்கி என்பதால், இந்த வங்கியில் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் 545 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்: ஆந்திரப் பிரதேசம் – 04, குஜராத் – 77, கருநாடகா – 78, மகாராட்டிரா – 67, தெலங்கானா – 41, தமிழ்நாடு – 51, மேற்கு வங்கம் – 80, ஜம்மு & காஷ்மீர் – 09, லடாக் – 02, அருணாச்சலப் பிரதேசம் – 04, அசாம் – 85, மணிப்பூர் – 06, மேகாலயா – 08, மிசோரம் – 05, நாகாலாந்து – 05, சிக்கிம் – 05, திரிபுரா – 18 என மொத்தம் 545 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். அதுபோக ஓராண்டு பணி அனுபவமும் அவசியம். ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் உள்ள வணிக வங்கி அல்லது ஊரக வங்கிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருப்பது அவசியம்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 01.07.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அன்றைய தேதியில் மேற்குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: இணைய வழி எழுத்து தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 09.08.2026 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு: https://pnb.bank.in/ தெரிந்து கொள்ளலாம்.
