சந்தி சிரிக்கும் பழநி கோயில் நிலப் பிரச்சினை! முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஅய்டி விசாரணை

3 Min Read

திண்டுக்கல், ஜூலை 22- பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஅய்டி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையராகப் பணிபுரிந்து பதவி உயர்வில் சென்னை சென்ற மாரிமுத்து நேற்று (21.7.2026) சிபிசிஅய்டி காவல்துறை கண்காணிப்பாளர் சாஜிதா முன்னிலையில் ஆஜரானார்.

பழநி கோயில் நில மோசடி

பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரில் திண்டுக்கல் மாவட்ட சிபிசிஅய்டி காவல் துறையினர் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள் ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

பழநியில் பிரச்சினைக்குரிய இடம் உள்ள பகுதி, பழநி பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிவற்றுக்குச் சென்று சிபிசிஅய்டி காவல்துறை கண்காணிப்பாளர் சாஜிதா விசாரணை நடத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஅய்டி அலுவலகத்தில் புகார்தாரர் முருகானந்தம் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் ஆகியோரிடம் விசாரணை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் வட்டச்சாலைப் பகுதியில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டனுக்கு சொந்தமான வீடு, நிலத்தை விற்ற விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீடு ஆகியவற்றில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று (21.7.2026) திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஅய்டி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணைய ராகப் பணிபுரிந்து, பதவி உயர்வில் சென்னை சென்ற மாரிமுத்து விசாரணைக்கு ஆஜரானார்.

இவரை தொடர்ந்து பழநி கோயில் கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத் துறை ஆய்வாளர் சிவனேசன், கோயில் செயல் அலுவலர் கணபதி உள் ளிட்ட அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களும் ஆஜராகினர்.

பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலம் குறித்து தங்களிடம் உள்ள ஆவணங்களை அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் வருவாய்த் துறையில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது பழநி கோயிலில் பணிபுரியும் மாரியப்பன், சின்னச்சாமி ஆகியோரிடமும் காவல் துறையினர் விசாரித்தனர்.

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பல பிரிவுகளாகப் பிரிந்து பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியில் வந்த முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து கூறும்போது, 1880 ஆண்டு முதல் நில ஆவணங்கள், மேலும் சில ஆவணங்களை சிபிசிஅய்டி காவல் துறையினரிடம் விசாரணைக்காக கொடுத்துள்ளோம் என்றார்.

நிலம் வாங்கியவர்
முன்பிணை கோரி மனு

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்தது தொடர்பான வழக்கில் உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார். அதில் அவர், பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்த மான 1.4 ஏக்கர்நிலத்தை மோசடி யாக பதிவு செய்ததாக என் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்தப் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். எனவே முன்பிணை தர வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி மனுவில் சிபிசிஅய்டி காவல் துறையினரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *