மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள் – 35)
பொறாமை, அதற்குக் காரணமாகிய ஆசை, அவற் றால் ஏற்படும் சினம், அதன் விளைவாகிய கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கிச் செய்வதும் அறமே.
“தோழர் ஆனைமுத்து 100 நூலின் அவதூறுகளுக்கு மறுப்பு!” புத்தகம் படித்தேன்.
“இறந்த ஒருவரைப் பற்றிய மரியாதையைக் குறைத்து விமர்சிப்பது நமது நோக்கமல்ல!
அதே நேரத்தில் மறைந்த ஒருவரை மய்யப்படுத்தி, பழையவற்றைத் தன்நோக்கத்துக்காக இஷ்டப்படிக் கிளறுவதும், தந்தை பெரியார் பற்றியும், அவர் கண்ட இயக்கம் குறித்தும் அய்யாவின் ஆயுள் நீட்சிக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்த அன்னை மணியம்மையார் குறித்தும், தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டு, பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி குறித்தும், அவதூறுகளை அள்ளி வீசும் வகையில் ஒரு நூல் வெளியிடப்படும் பொழுது, சம்பந்தப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உரிய வகையில் உண்மையை எடுத்துக் கூறக் கடமைப் பட்டவர்கள் என்ற முறையில் இந்தக் கட்டுரை வெளியிட நேர்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத் தலைவர் ஆசிரியரிடம் இது பற்றிக் கூறியபோது, ‘‘இதற்கெல்லாம் பதில் எழுத வேண்டுமா?’’ என்று கேட்டார். சமகாலத்திலேயே தவறான தகவல்கள் – உண்மைக்கு மாறான செய்திகள் ஒரு நூலாக வெளிவந்துள்ள நிலையில், அவற்றை ஆதாரமாகக் கொண்டு பிற்காலத்தில் தவறான கருத்து கிருமியாகப் பரவக்கூடும். எனவே இது தேவை என்று வலியுறுத்தினோம்; அந்த அடிப்படையில் தான் இந்தக் கட்டுரை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று இந்தப் புத்தகத்தில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கட்டுரை முடிகிறது.
‘‘எதிலும் தன்முனைப்பு, முந்திரிக்கொட்டைத்தனம், எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்ற ஆணவம், கூசாமல் உண்மைகளை மறைக்கும் உத்திகள் – இவற்றின் கூட்டுத்தொகைக்கு மறுபெயர் தான் தோழர் ஆனைமுத்து என்று ஒரே வரியிலேயே கூறிவிடலாம்.” என்று தோழர் ஆனைமுத்து அவர்களின் உளவியல் குறைபாடுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து கவிஞர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகம், கழகத் தோழர்கள்மீது திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ள பொய்மைகளையும், அவதூறுகளையும் – சுட்டெரிக்கும் நெருப்பாக இந்தப் புத்தகம் உள்ளது! கழகத் தோழர்கள் படிக்க வேண்டும்.
மற்றவர்களும் படிக்கும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
– சைதை மு.ந. மதியழகன்
