சென்னை, ஜூலை 18– கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதால் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உணவு பாது காப்புத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிப்பதாவது: நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடாம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை நீண்ட காலம் உட்கொள்வதால் புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.
இவை செரிமான மண்டலத்தை பாதித்து, வயிற்றுப் புண், குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. தரம் குறைந்த இந்த ரசாயனங்கள் உடலில் இருந்து எளிதில் வெளி யேறாமல் கல்லீரல், சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குழந்தைகளுக்கு அலர்ஜி, கவனச் சிதறலை உண் டாக்கும் ஆபத்தும் உள்ளது.
எனவே, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சி வளாகங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது. தயாரிப்பாளர்கள், வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகளைப் பயன்படுத்தி அப்பளம் தயாரித்து, விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோரும் குழந்தைகளுக்கு கலர் அப்பளங்களை வாங்கித் தரவேண்டாம். செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களை தவிர்த்து, இயற்கையான முறையில் உளுந்து, அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளத்தை வாங்கி பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சிகளில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை .
Leave a Comment
