சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று, தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய பல அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது. அந்த வகையில் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமார் தற்போது வரை தலைமைச் செயலாளராக நீடித்து வருகிறார். அவருக்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பணிக்காலம் இருக்கிறது.
இதற்கிடையே, தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதையேற்று அவருக்கு மேலும் 6 மாதகாலம் (2027 பிப்ரவரி 28 வரை) பணி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் சாய்குமார் மேலும் 6 மாதங்கள் அதே பொறுப்பில் தொடருவது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சாய்குமார் மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகவும், மின்சார வாரியம், பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளில் உயர் பதவிகளையும் வகித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் சாய்குமார் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
