சென்னை, ஜூலை 13– தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யின் கரூர் மாநாட்டுப் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்த விவகாரத்தில், கரூரில் மேலும் ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பள்ளி தலைமை ஆசிரியரும் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
முதலமைச்சர் உரை
அண்மையில் கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய உரையை, கரூர் மாவட்டத்தின் சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இது கல்வித் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையில்:
“அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை. அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என்று ஏற்கெனவே தெளிவான உத்தரவு உள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி” என்று எச்சரித்திருந்தார். மேலும், விதிகளை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தச் சூழலில், இதே புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி என்பவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசுக் கொள்கைகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கைக்கும் முரணாகச் செயல்பட்டது மற்றும் பணி தவறியது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. இந்நிகழ்வு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடப்புத்தகங்கள்
சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான உடற்கல்வி பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடத்திட்டங்கள் அடங்கிய தனிச் சிறப்பான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு சுமார் 2 கோடி ரூபாய் (ரூ.1.93 கோடி) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து இந்த செலவினங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.58,000-க்கும் அதிகமான பள்ளிகள் பலன்
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. மொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரம் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக தயாராகி, அடுத்த வாரம் முதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் பிற பாட வேளைகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு திறமை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
