வலுக்கிறது ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதால் அங்கு போர் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தாக்குதலால் புதினுக்கு தற்போது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பல பகுதியில் பெட்ரோலுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது.
நாள்தோறும் 30 நிமிடம் நடந்தால் பரிசு: இங்கிலாந்து
உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரிட்டன் நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS) Movement 26.2 எனும் புதிய நடைப்பயிற்சி திட்டத்தை அறிவித் துள்ளது. அதன்படி, நாள்தோறும் 20 – 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்பவர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் தள்ளுபடிகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் 2027 தொடக்கத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. நடைப்பயிற்சியை கைப்பேசி மற்றும் அதி நவீன கைக்கடிகாரம் மூலமாக பதிவு செய்யலாம்.
மாபெரும் ஊழல்… கட்டடமே இல்லாத தாள் மருத்துவமனை
ம.பி.,யின் இந்தூரில் அரசு மருத்துவமனை கட்டடமே இல்லாமல் 6 ஆண்டுகளாக இயங்கி வந்த மாபெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 100 படுக்கைகள் மற்றும் 87 ஊழியர்களுடன் வெறும் தாளில் மட்டுமே இயங்கி வந்துள்ளது. இதுவரை மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற பணியிட மாறுதல் நடவடிக்கையின்போது இந்த முறைகேடு அம்பலமானது.
திருமணத்தை மீறிய உறவு.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
திருமணத்தை மீறிய உறவை நிரூபிக்க கணவன் – மனைவியின் கைப்பேசி அழைப்புப் பதிவுகள், தங்கும் விடுதி விவரங்களை நீதிமன்றம் மூலம் பெறுவது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகக் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்தை திருமண முறிவு வழக்குகளில் துரோகத்தை மறைப்பதற்கான கேடயமாக பயன்படுத்த முடியாது. பாதிக்கப்பட்ட வாழ்க்கை துணை, ஆதாரங்களை சேகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
