புதுடில்லி, ஜூலை 4 நாட்டில் மோடி – ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்திற்குப் மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்து, 140 கோடி மக்களின் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இண்டியா கூட்டணியின் கூட்டுக் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (SIR) நடவடிக்கைகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ‘இண்டியா’
(I.N.D.I.A.) கூட்டணி சார்பில் கூட்டுக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது மொத்தம் 23 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துக்களுடன் இந்த முக்கியக் கடிதம் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீதித்துறை காக்க வேண்டும்
இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தற்போதைய ஆட்சி முறையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“நாட்டில் மோடி-ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகம் மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. நமது ஜனநாயகத்தை ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது நீதித் துறையின் கடமையாகும். அதுவும் குறிப்பாக அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பை அழிப்பதில் குறியாக இருக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து அதைப் பாதுகாப்பது அவசியமாகும்.”
மேலும், அநீதி மேலோங்காமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் தார்மிக பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டே இந்த கடிதம் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
