சென்னை, ஜூலை 4- பி.எட், எம்.எட் பட்டதாரிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்குமாறு தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை:
பொது மற்றும் சிறப்புக் கல்வி பிரிவுகளில் பி.எட், எம்.எட் பட்ட வகுப்பு படித்த மாணவர்களின் அசல் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி, ஒளிப்படம் ஆகியவற்றில் திருத்தம் கோரிய கல்லூரிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. ஒருசில கல்லூரிகள் குறைபாடு உடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
இதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க, மாணவர்களின் விண்ணப்பத்தை நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்து, திருத்தம் செய்த சான்றிதழ்களை மாணவர்களுக்கு உடனே வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே
கூடுதல் சிறப்பு ரயில் சேவை
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம், ஜூலை 4- சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலின் சிறப்பு சேவைகளை அதிகரித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 ஜூலை 7ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே தினசரி கூடுதல் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஜூலை மாதத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த கூடுதல் ரயில் சேவைகள் மூலம் நீலகிரி மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயண வசதி மேலும் மேம்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
