எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்
968இல் வெளிவந்த ‘விடுதலை’ – தந்தை பெரியார் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்
மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
மிக முக்கிய நிலைமைகளை விளக்கும் – என்றும் வழிகாட்டும் அறிக்கை
நான் 1920இல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.
நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.
விளையும் பயிர் முளையிலேயே . . .
நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.
மாடு, எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.
1900இல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது ‘என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது’ என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.
எக்குழுவிலும் நான்தான் தலைவன்
நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே – மற்றவர்கள் என் சொல் கேட்பவர்களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.
இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, ஒரு சாதாரண அங்கத்தினனாக எதிலும் இருந்ததில்லை.
அதுபோலவே எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிறத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேனேயொழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு – உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனேயொழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.
என்னைப் பற்றி
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.
எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட்டேன்.
ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.
எனது கொள்கைகள்
எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.
நான் காங்கிரசை விட்டதற்கும்
இதுதான் காரணம்:
ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.
ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.
காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்
வெள்ளையன் போன பின்பு 1952இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.
எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் – அதாவது காமராஜர் பதவிக்கு வந்தவுடன், பார்ப்பனர்களும், அவர்களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங்கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.
தி.மு.க.வை எதிர்த்ததேன்?
இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தர்ப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதரவாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம்மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப்பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதரவாளனாக இருக்க வேண்டியதாகியதும் இதற்கு ஆகத்தான்.
நாளை எனது நிலை
ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித்தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப்பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!
பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.
குறிப்பு: இந்த மூன்றிலும், அதாவது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.
