பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பகுதி நேர பட்டப்படிப்பு
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் (கோவை, சேலம், நெல்லை , பர்கூர், வேலூர், காரைக்குடி) மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ( கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி) பகுதி நேர (Part-Time B.E.,) பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஜூன் 15ஆம் தேதி முதல் பெறப்படுகிறது
இந்த பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளில் பயில பட்டயப் படிப்பு முடித்து குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்களிடமிருந்து (Working Professionals) இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. B.E., Civil, Mechanical, EEE. ECE, CSE ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
1,400 இடங்கள்
மொத்தம் 1,400 இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டு முதல் (2026-2027) பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் என்பது குறிப்பிடத் தக்கது. வருகின்ற ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இணையதளம்
விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை www.ptbe-tnea.com என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பு மய்யமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 0422-2590080, 9486977757 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
