போபால், ஜூன் 24- மத்தியப் பிரதேசம் விடிஷா பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி தேர்வு மய்யத்தில் நடந்த ரீ-நீட் (re-NEET) தேர்வில், குல்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ராகினி என்ற மாணவி சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
அன்றாடம் கூலி வேலை செய்து வரும் அவரது தந்தை உமேஷ் விஸ்வகர்மா, பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, லேப்டாப் மற்றும் ஸ்கூட்டர் வாங்கித் தந்து தனது மகளைத் நாள்தோறும் 10 மணி நேரம் படிக்க வைத்துள்ளார்.
எப்படியாவது கார்டியாலஜிஸ்ட் (இதய நோய் நிபுணர்) ஆக வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு வந்த மாணவி, மழையினாலும், ஸ்கூட்டர் டயர் பஞ்சர் ஆனதாலும் தேர்வு மய்யத்திற்கு 1:30 மணிக்குப் பதிலாக சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். கேட் மூடப்பட்டதால் ராகினியும், அவரது தந்தையும் அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளனர்; ஒருகட்டத்தில் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தந்தை உமேஷ் தேர்வு மய்ய வாசலிலேயே மயங்கி விழுந்து கதறி அழுதார்.
இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. பின்னர் அதிகாரிகள் ராகினியை உள்ளே அழைத்துச் சென்றபோதிலும், 1:40 மணியுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான இணைய வழித் தடம் மூடப்பட்டதால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது. இதய நோயால் யாரும் தங்களது அன்பானவர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவே தான் மருத்துவராக ஆசைப்பட்டதாகக் கூறி மாணவி ராகினி கண்ணீர் மல்கத் தெரிவித்தது பார்ப்போரை உருக வைத்துள்ளது.
மாநகராட்சி ‘வாட்ஸ் ஆப்’ சேவை: 1.86 லட்சம் பேர் பயன்!
சென்னை, ஜூன் 24- சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி சேவையைப் பெற்று இதுவரை 1.86 லட்சம் பேர் பயனடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதில் அவர்கள் பெறும் வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாட்ஸ் ஆப் செயலி ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் சொத்துவரி, தொழில் வரி, வணிகவரி உள்ளிட்ட 44 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ் ஆப் செயலியை 24 மணி நேரமும் மக்கள் பெறும் வகையில் தொடர்புகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினமும் 600 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பிறப்புச் சான்றுகள் வாட்ஸ் ஆப் செயலி மூலம் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றன.
மக்களுக்கு தாமதமின்றியும், அலைச்சலின்றியும் பிறப்புச் சான்றுகள் விநியோகிக்கப்படுவதுடன், காகிதமில்லாத பயன்பாட்டை சாத்தியமாக்கியும் உள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் வாட்ஸ் அப் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 2.14 லட்சம் பேர் அதை பதிவு செய்து பயன்படுத்திவருகின்றனர். அவர்களில் 1.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ளனர். அத்துடன் ஒருங்கிணைந்த கட்டணச் சேவைகள் மூலம் ரூ.43.76 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
