ஜாதி ஒழிப்புப் போராளி
இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மாள்
நினைவு நாள் இன்று – 24.06.1958
ஜாதி ஒழிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்த நாள் நவம்பர் 27, 1957. தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று – 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள், ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தினர்; 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையேகினர். பிணை கேட்டு அவர்கள் வெளியே வரவில்லை. 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஏற்றனர்.
சிறைப்பட்ட ஒருவர்கூட அரசியல் கைதியைப் போல் நடத்தப்படவில்லை. கீழான சமூகக் குற்றங்களைச் செய்த கைதிகளைப் போலவே அரைக்கால் டிரவுசர் அரைக்கைச் சட்டை, சட்டையில் வில்லை என்ற முறையில் அவமானப்படுத்தப்பட்டனர். மற்ற கிரிமினல் கைதிகளைப் போலவே தோட்ட வேலை, சமையற்கட்டு, சமையல் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டனர். சிறையின் உணவும், தட்பவெப்ப நிலையும், போதிய தண்ணீர் வசதி இல்லாமையினாலும், அலட்சியமான மருத்துவ கவனிப்பினாலும் பலர் நோய்வாய்ப்பட்டனர்.
அவ்வாறு சிறையில் துன்பப்பட்டவர்களில், ஜாதி ஒழிப்புப் போராளி இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள் அவர்களும் முக்கியமானவர் ஆவார். இன்று அவரின் மறைவு நாள் (24.6.1958) ஆகும்.
