* சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தற்போது காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் காவல் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் சேகர் ஆகியோரது தலைமையின்கீழ் காவல் நிலையம் இயங்கி வருகிறது.
* சமீபகாலமாக இந்தக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்கத் துப்பு துலக்க வேண்டிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும், குற்றங்கள் குறைய கிடா வெட்டிப் பலியிட்டு வழிபாடு செய்துள்ளனர்.
* நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜை செய்து, காவல் நிலைய வாசலில் ஆட்டு கிடாவை வெட்டிப் பலி கொடுத்துள்ளனர். உச்சகட்டமாக, வெட்டப்பட்ட கிடாவின் ரத்தத்தைக் காவல் நிலையக் கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசியுள்ளனர்.
*அதிகாலை 4 மணிக்கு இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டுள்ளன. பொழுது விடிந்ததும், பலி கொடுக்கப்பட்ட கிடாவின் கறியை அருகில் உள்ள ஒரு இறைச்சி மய்யத்திற்கு தூக்கிச் சென்று தடபுடலாக பிரியாணி சமைத்தனர். மதிய உணவு நேரத்தில் இருந்து மாலை வரை, காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் ஷிப்ட் முறையில் ஒவ்வொருவராகச் சென்று அந்தப் பிரியாணியை ருசி பார்த்துள்ளனர்.
*சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையத்தில், குற்றங்களைக் குறைக்க காவல்துறையினரே மாந்திரீக பூஜை செய்து, ஆட்டு பலி கொடுத்து, ரத்தம் பூசிய சம்பவம் ஓமலூர் பகுதியில் காட்டுத்தீயாய் பரவி, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
