அப்ரண்டீஸ் ப்ரோக்ராமின் காலக்கெடு 1 ஆண்டு. இந்த 1 ஆண்டு காலத்திற்கும் உங்களுக்கு ரூ.15,000 பணிப் பயிற்சி ஊதியம் (ஸ்டைபண்ட்) வழங்கப்படும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஒரு சில நாள்களுக்கு முன்னர் எஸ்பிஅய் வங்கியில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பின் காலக்கெடுவை அனைவரும் பயன்பெரும் வகையில் வங்கி நீட்டித்திருக்கிறது. இதுவரையில் விண்ணப்பிக்க தவறியவர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
எஸ்பிஅய் பேங்க்கிற்கு இந்தியா முழுவதிலும் 7,150 அப்ரண்டிஸ் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்துவதற்காக மே 19-ஆம் தேதி எஸ்பிஅய் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக ஜூன் 8-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக கடைசித் தேதியை ஜூன் 15-ஆம் தேதி வரை எஸ்பிஅய் வங்கி நீடித்துள்ளது. இன்றிலிருந்து இன்னும் தோராயமாக ஒரு வார கால அவகாசம் இருப்பதால் வேலை தேடுபவர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடைசி நேர தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே விண்ணப்பிக்கவும் எஸ்பிஅய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் “எஸ்பிஅய் கரியர் போர்டல்” மூலமாக விண்ணப்பிக்கலாம். நீங்கள் இணையதளம் மூலமாக உங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். ஜூன் 15-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் விண்ணப்பிப்பது நல்லது. அப்ரண்டீஸ் ப்ரோக்ராமின் காலக்கெடு 1 ஆண்டு. இந்த 1 ஆண்டு காலத்திற்கும் உங்களுக்கு ரூ.15,000 பணிப் பயிற்சி ஊதியம் (ஸ்டைபண்ட்) வழங்கப்படும்.
முதலில் உங்களுக்கு ஒரு எழுத்துத் தேர்வு இருக்கும். அதன் பிறகு உள்ளூர் மொழி தேர்வு. இதில் தகுதி பெற்று விட்டால் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். கல்வி தகுதியை பொறுத்தவரையில் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நீங்கள் இளங்களைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க 20 முதல் 28 வயதுடையவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் எஸ்பிஅய்-யின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்னர் “எஸ்பிஅய் அப்ரண்டீஸ் ரெக்ரூட்மெண்ட் 2026” விண்ணப்பத்தின் இணைப்பை (லிங்கை) அழுத்தி உங்களுடைய e-mail முகவரி மற்றும் கைப்பேசி நம்பரை கொண்டு பதிவு செய்யலாம்.
பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் சரியான விவரங்களை வழங்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் (அப்லோட்) செய்து அதற்கான தொகையைச் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்த பிறகு இறுதி உறுதிப் பக்கம் (கன்ஃபர்மேஷன் பேஜ்) தெரியவரும். அதை நீங்கள் பிற்காலத் தேவைக்கு பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்திருக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு எஸ்பிஅய் அறிவிப்பை கவனமாக படித்து விட்டு விண்ணப்பியுங்கள்!
