கன்னியாகுமரி, ஜூன் 6 கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கேபிள் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கேபிளில் ஏற்பட்ட பழுதால் திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சிலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
மேலும், கண்ணாடி பாலத்தில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிரும் அலங்கார மின் விளக்குகளும் கடந்த இரண்டு நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் வழங்கும் கேபிளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
