சென்னை,ஜூன் 2- மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (1.6.2026)தொடங்கியது.
தமிழ்நாட்டில் ஒரு இடத்துக்கான தேர்தலுக்கு 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை விட்டு விலகியுள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு நேற்று (ஜூன் 1) வெளியான நிலையில், வேட்புமனு தாக் கலும் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் 2 சுயேச்சை வேட்பாளர்கள் முதல்நாளான நேற்று (1.6.2026) மனு தாக்கல் செய்தனர்.
அதில் ஒருவர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனு தாக்கல் செய்யும் மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 255ஆவது மனு. அவருடன் அக்னி ஆழ்வார் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இருவருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன் மொழிவை வழங்க வில்லை.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 8ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை 9ஆம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற 11ஆம் தேதி கடைசி நாள். போட்டி இருக்கும் பட்சத்தில், ஜூன் 18ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
