
மருத்துவர்
எஸ்.திருநாவுக்கரசு
(குழந்தை காது, மூக்கு, தொண்டை மற்றும்
மூச்சுக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்)
மூச்சிரைப்பு என்பது நமது சுவாசப் பாதை பகுதியளவு தடுக்கப்படும் போது அல்லது குறுகும் போது, உங்கள் மூச்சில் இருந்து எழும் கீச்சிடும், கரடு முரடான விசில் அல்லது சலசலப்பு போன்ற ஒலியாகும்.
இது பொதுவாக நீங்கள் மூச்சை வெளியிடும்போது மிகவும் தெளிவாகக் கேட்கும். சில சமயங்களில் இது உள்ளார்ந்த உடல்நிலை காரணமாக சுவாசப் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால், மற்ற நேரங்களில் காற்றில் உள்ள தூசிக்கான எதிர்வினையாகவோ அல்லது உங்களுக்கு சளி பிடித்திருப்பதாலோ மூச்சிரைப்பு ஏற்படலாம்.

மூச்சிரைப்பு ஏற்படக் காரணம்
மூச்சிரைப்பு ஏற்படுவதற்கான காரணத்தைப் பொறுத்து அதற்குப் பல சிகிச்சைகள் உள்ளன. ஆஸ்துமா போன்ற நாள்பட்ட உடல் நலப் பிரச்சினையால் மூச்சிரைப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் மூச்சிரைப்பு ஏற்படலாம். பெரியவர்களில் புகைப் பிடிப்பவர்கள் மற்றும் நுரையீரல் விரிவு நோய் (எம்பிசிமா) அல்லது இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பச்சிளம் குழந்தைகளிடம் மூச்சிரைப்பு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கு அவர்களின் முதல் ஆண்டில் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்குச் சிறிய சுவாசப் பாதைகள் இருப்பதால் இது நிகழலாம்.

ஆஸ்துமா
கேள்வி: ஆஸ்துமா என்பது என்ன?
பதில்: ஆஸ்துமா என்பது கீழ்ப்பக்க மூச்சுக்குழாய் நுரையீரலில் போய்ச் சேரும் பகுதிகளில் தற்காலிக சுருக்கம் ஏற்படுவதனால் வருவது. அதற்கு முதன்மையான காரணம் ஒவ்வாமை (அலர்ஜி). அது மூக்கு அலர்ஜியுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அதற்கான தீர்வு என்பது மருந்தினால் குணப்படுத்துவது. வருவதற்கு முன்பே தொடர் முன் சிகிச்சையால் தடைப்படுவது, ஆஸ்துமாவைத் தூண்டும் காரண காரியங்களைத் தடுத்துக் கொள்வது.
கேள்வி: எல்லாவிதமான மூச்சுத் திணறலும் ஆஸ்துமாவினால்தான் வருகிறதா?
பதில்: காற்றுப் பாதை என்பது (Air Way) மூக்குத் துவாரத்தில் ஆரம்பித்து நுரையீரல் வரை காற்றுப் போகும் பாதை. ஆகவே, மூச்சுத் திணறல் இந்தப் பாதையில் எந்த இடத்தில் தடை ஏற்பட்டாலும் மூச்சுத் திணறல் ஏற்படலாம். எனவே, எல்லா மூச்சுத் திணறலையும் ஆஸ்துமா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
கேள்வி: குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருமா?
பதில்: பொதுவாக அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவது மிக அரிது. எனவே, பச்சிளங் குழந்தைக்கோ, சிறு குழந்தைக்கோ மூச்சுத் திணறல் ஏற்பட்டால் வேறு இடத்தில் (காற்றுப் பாதையில்) தடை ஏற்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
கேள்வி: மூச்சுத் திணறல் பிறந்த குழந்தைக்கு வருமா?
பதில்: குழந்தை பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது காற்றுப் பாதையில் கருவிலேயே சரியாக உருவாகாமல் தடை ஏற்படுவதானால் (Congenital Disorder) மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதற்கான பரிசோதனை செய்து நோயின் நிலையைக் கண்டறிந்து மருத்துவ சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தலாம்.
பால் குடிப்பதில் சிரமம்
மூச்சுத் திணறலோடு சேர்ந்து பால் குடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அறிய வேண்டும்.
கேள்வி: Tracheostomy குழந்தைகளுக்கு செய்யலாமா?
பதில்: மூச்சு மற்றும் பேச்சுக் குழாயில் தடை ஏற்பட்டால் மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். அப்பொழுது தற்காலிகமாக கழுத்தில் துளைப்போட்டு புறக்குழாய் ஒன்றை இணைத்து மூச்சு விடுவதை பைபாஸ் செய்து கொள்ளலாம். ஆனால், இது தற்காலிகமான சிகிச்சை முறை. நிரந்தரமாக மாற்ற எங்கு தடை உள்ளதோ அங்கு அறுவை சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்த பிறகு Tracheostomy குழாயை அகற்றலாம்.
கேள்வி: குழந்தை பிறப்பிலேயே அழும் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: பேச்சு உறுப்பில் (Voice Box) கருவிலேயே உருமாற்றம் ஏற்பட்டு பேச்சு நரம்பு துடிப்பதில் பிரச்சினை இருந்தால் குழந்தை அழும் சத்தம் வெளியில் கேட்காது. அதை என்டோஸ்கோபி (Endoscopy) செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். உடனே மருத்துவரின் ஆலோசனைப் பெறாமல் காலம் தாழ்த்தினால் பெரும் விளைவுகளைப் பிற்காலத்தில் ஏற்படுத்தும்.
