சென்னை, மே 19- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் சதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய உர விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உர உற்பத்தி
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் மற்றும் ஹார்மூஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்வது பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியா டய்-அமோனியம் பாஸ்பேட் உரத்திற்கு 60 விழுக்காட்டிற்கு மேலாகவும், பொட்டாஷ் உரத்திற்கு முழுமையாகவும் இறக்குமதியையே நம்பியுள்ளது.
“போர்ச் சூழலை முன்கூட்டியே கணித்து, வேளாண் உற்பத்திக்குத் தேவையான உரங்களை ஒன்றிய அரசு திட்டமிட்டு முன்னரே இறக்குமதி செய்திருக்க வேண்டும். அதேபோல் உள்நாட்டிலும் உர உற்பத்தியை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசின் இந்த அலட்சியமே தற்போதைய விலையேற்றத்திற்குக் காரணம்.”
ஒன்றிய அரசின் திட்டமிடல் இல்லாததாலும், இந்தியாவில் உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளாலும் முக்கிய உரங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக:
மோனோ-அமோனியம் பாஸ்பேட் மோனோ-பொட்டாசியம் பாஸ்பேட் எஸ்ஓபி தண்ணீரில் கரையும் உரங்கள் போன்ற முக்கியப் பொருட்களின் விலை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய வேளாண்மைக்கு அத்தியாவசியமான உரங்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இல்லையெனில், போதிய விளைச்சலின்றி விவசாயிகள் நட்டமடைவதோடு, நாட்டில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் உருவாகும்.
நிவாரணத் தொகை
எனவே, ஒன்றிய அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது: உரங்களை போதிய அளவில் உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும். தற்போதைய உர விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அதனை ஈடு செய்யும் வகையில் உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
