சென்னை, மே 18– நீட் தேர்வு முறைகேடு மற்றும் மறுதேர்வு அறிவிப்பு காரணமாக, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கத் திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களின் சேர்க்கை செயல்முறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ஆலோசனை மய்யங்கள் தெரிவித்துள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு
மே 3இல் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், வெளிநாட்டு மருத்துவப் படிப்புகள் குறித்து மாணவர்கள் செய்து வந்த விசாரணைகள் திடீரெனக் கணிசமாகக் குறைந்துள்ளன.
மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு சேர்க்கை 2 மாதங்கள் வரை தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மாணவர்களை அதிகம் ஈர்த்து வரும் ரஷ்யா, ஜார்ஜியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு சீனா மீதும் மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் நீட் தேர்வு முடிவுகள் வெளியானால் மட்டுமே விசா நடைமுறைகள் சுமுகமாக நடக்கும் (விசா பெற 3 முதல் 8 வாரங்கள் வரை ஆகும்). அதற்கு மேல் தாமதமானால் சேர்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் 4,000 மாணவர்கள் செல்லும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள், நுழைவுத்தேர்வை ஜூலைக்குப் பதில் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளன. அங்கு அக்டோபர் வரை சேர்க்கை நடப்பதால் பெரிய பாதிப்பு இருக்காது.
சீனாவில் கிளினிக்கல் மெடிசின் படிக்கும் இந்திய மாணவர்கள், அங்கு பிராக்டிஸ் செய்வதற்கான உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறை இன்னும் சிக்கலாகவே நீடிக்கிறது.
நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சல், சந்தேகம் மற்றும் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, “ஏமாற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆறுதல் வார்த்தைகள் தற்போதைய சூழலில் மிக அவசியம். மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, அரசு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் (மனநல ஆலோசனை) வழங்க வேண்டும்.” என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
