சென்னை, மே 16- ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹோர்மூஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியது. இதனால் பன்னாட்டு அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அதாவது கடந்த 10ஆம் தேதி அய்தரா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பன்னாட்டு போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
இத்தகைய சூழலில் நேற்று (15-05-2026) அதிகாலையிலேயே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிடுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய அய்ந்து மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்த பாஜக ஒன்றிய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைத் திடீரென உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. பெட்ரோல் – டீசல் ஆகியற்றின் விலையை லிட்டருக்கு 3.00 ருபாய் என உயர்த்தியிருப்பதன் மூலம் பாஜக அரசு எளிய மக்களின் அடிவயிற்றில் கை வைத்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் பக்க விளைவுகளாக அனைத்து இன்றியமையாத அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலைவாசியும் வெகுவாக உயரும். இதனல் மிகவும் பாதிக்கப்பட போவது விளிம்புநிலையைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்கும் மக்களே ஆவர். எனவே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறவேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
