
ஜெய்பூர்: நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பாஜக தலைவர் தினேஷ் பின்வால் மற்றும் அவரது சகோதரர் மங்கிலால் ஆகியோரை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பல “பெரிய மனிதர்கள்” பின்னணியில் இருப்பதாக தினேஷ் பின்வால் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் குழுவினரின் தகவல்படி, கடந்த ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே அதன் வினாத்தாளை தினேஷ் பின்வால் மற்றும் மங்கிலால் ஆகியோர் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் ரூ.30 லட்சம் வரை கைமாற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பு குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் பின்வால், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தங்களை பலிகடா ஆக்குவதாகவும், இதன் பின்னணியில் உள்ள செல்வாக்கு மிக்க “பெரிய மனிதர்களை” விசாரணை அமைப்புகள் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“நாங்கள் வெறும் கருவிகள்தான். இந்த ஊழலின் ஆணிவேர் உயர்மட்டத்தில் உள்ளது. அதிகாரத்தில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றவே எங்கள் மீது பழி சுமத்தப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் எங்கிருந்து கசிந்தது மற்றும் இதில் தொடர்புடைய அந்த “பெரிய மனிதர்கள்” யார் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
