புதுடில்லி, மே 15 பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆா்) பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
பீகாா், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு, அசாம் ஆகியவற்றில் ஏற்கெனவே இரு கட்டங்களாக எஸ்அய்ஆா் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து 3-ஆவது கட்டமாக 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் அந்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடா்பாக இந்தியத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
டில்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூா், உத்தரகண்ட், சண்டீகா், தெலங்கானா, பஞ்சாப், கருநாடகம், மேகாலயா, மகாராட்டிரம், ஜாா்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா – நகா் ஹவேலி, தமன் – தியூ ஆகியவற்றில் எஸ்அய்ஆா் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மே மாதம் 30-ஆம் தேதிமுதல் பல கட்டங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பிறகு அறிவிக்கப்படும். 3-ஆவது கட்ட எஸ்அய்ஆா் பணியில் 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுவா். அவா்கள் வீடு வீடாகச் சென்று 36.73 கோடி வாக்காளா்களையும் நேரில் சந்தித்து பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவா் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
3-ஆவது கட்ட எஸ்அய்ஆா் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராட்டிரமும் ஒன்று. அங்கு மொத்தம் 9 கோடியே 86 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவா்களை நேரில் சந்தித்து வாக்காளா் குறித்த தகவலைத் தயாரிக்க வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்களுக்கு ஜூன் மாதம் 20-29 வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை எஸ்அய்ஆா் பணியில் அவா்கள் ஈடுபடுவா் என்று அந்த மாநில தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
