லக்னோ, மே 12 – நாட்டிற்கு ஒரே ஒரு ‘நெருக்கடி’ பா.ஜ.க. மட்டுமே என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார்.
இதுகுறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ், அய்ந்து மாநில தேர்தல்கள் முடிவடைந்த உடனேயே, நெருக்கடி குறித்து பா.ஜ.க. பேச தொடங்கி விட்டதாகபுகார் கூறியுள்ளார்.ஆனால்நாட்டிற்கு ஒரேஒருநெருக்கடி பா.ஜ.க. மட்டும்தான் என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க. அரசின் கைகளிலிருந்து ஆட்சிப் பொறுப்பின் கடிவாளம் முழுமையாக நழுவிவிட்டது போலவே தோன்றுவதாகவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சீறிப் பாய்கிறது என்றும் அகிலேஷ் தெரிவித்துள்ளார். தங்கம் வாங்க வேண்டாம் என்ற வேண்டுகோளைப் பொதுமக்களிடம் விடுக்கக் கூடாது என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வினர் தங்களின் கருப்புப்பணத்தை தங்கமாக மாற்றி அதிக அளவில் குவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அய்ந்து மாநில தேர்தலுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்ததா என்றும், தேர்தல்களின்போது, பா.ஜ.க.வினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான தனி விமானங்கள் தண்ணீரில் இயக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கலாச்சார, மத, அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பா.ஜ.க. நாட்டைச் சீரழித்துள்ளது என்றும், பா.ஜ.க.வின் கதை முற்றிலுமாக முடிந்துவிட்டது எனவும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
கேரள அரசுக்குத் தனியார் பேருந்து நிறுவனங்கள் கோரிக்கையாம்!
திருவனந்தபுரம், மே 12 கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி யூடிஎப் ஆட்சிக்கு வந்தால், கேரள அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில், பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது ‘இந்திரா உத்தரவாதம்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு இலவசப் பயணம்
இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய அரசுக்கு தனியார் பேருந்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தனியார் போக்குவரத்து நிறுவனங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இது மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்கள் அமைப்பின் மாநில தலைவர் டி.கோபிநாதன் கூறுகையில், “இது ஒரு தலைபட்சமான அறிவிப்பு. இலவச பயணம் காரணமாக பெண்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யத் தொடங்கினால், தனியார் பேருந்துகளில் மாணவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள்.
அது தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் வருமானத்தை பெருமளவு பாதிக்கும். இந்தத் துறை ஒரே இரவில் மறைந்துவிடக்கூடும். இத்தகைய ஒரு முக்கிய கொள்கை முடிவை செயல்படுத்துவதற்கு முன்னர், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் அரசு கலந்துரையாட வேண்டும். இந்த திட்டத்தின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு ஒரு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
