மதுரை, ஏப். 28- மதுரை அருகே கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டங்கள் இயற்றுவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு களையும் பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி, மதுரை ஆலங்குளம் பகுதியில் சுமார் 25 மாணவிகளுடன் சென்ற கல்லூரி பேருந்து ஒன்றை, இறுதி ஊர்வலத்தில் வந்த போதை கும்பல் வழிமறித்தது.
அவர்கள் மாணவி களை ஆபாசமாகப் பேசியதுடன், பேருந்து ஓட்டுநரை தலைக்கவசம் மற்றும் காலணிகளால் கடுமையாகத் தாக்கினர். இதில் பேருந்தும் சேதமடைந்தது.
இந்த வன்முறை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சங்கர், அஜித் குமார், சந்திரபோஸ் ஆகிய மூவரும் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், குற்றவாளிகளுக்கு பிணை வழங்க மறுத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவில் குறிப்பிட்டதாவது:
“மாணவிகள் இருந்த பேருந்தை வழிமறித்துத் தாக்கியது சாதாரணமான நிகழ்வு அல்ல.
இறுதிச் சடங்குகளைச் செய்வது அடிப்படை உரிமை என்றாலும், அது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது வன்முறையாகவோ மாறக்கூடாது.”
இந்த வழக்கில் உண்மைகளைக் கண்டறிய மனுதாரர்களைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்பதால், அவர்களின் முன்பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அரசுக்கு முக்கிய உத்தரவு
இறுதி ஊர்வலங்களில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இறுதி ஊர்வலங்களில் பட்டாசு வெடிப்பது, மது அருந்திவிட்டு ஆபாசமாக ஆடுவது மற்றும் மாலைகளைச் சாலைகளில் வீசுவது போன்ற பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க வேண்டும்.
இவற்றை முறைப் படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேவையான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத் தகட்ட விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
