உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்
குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்குரைஞர்கள் முடிவு
சென்னை, ஏப்.28 சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நீண்ட காலமாக காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான எம்.வேல்முருகன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. ஆனால், 52 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
எஞ்சிய 23 பணியிடங்கள், அதாவது மூன்றில் ஒருபங்கு இடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. மேலும், தற்போது மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.சுரேஷ்குமார் மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளை நியமிக்க ஏற்கெனவே 24 பேர் கொண்ட பட்டியல் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளின் தேக்கம் அதிகரித்து நீதிபதிகளுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது.
வழக்குகளை மீண்டும் பட்டியலுக்குக் கொண்டுவர முடியாமல் வழக்குரைஞர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் வழக்காடிகள் வேதனையடைந்து, நீதித் துறை மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.
பணியில் உள்ள நீதிபதிகள் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் நிலையில், அதை கணக்கிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களையும் சமூக நீதியின் அடிப்படையில் விரைவாக நிரப்ப உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், ஒன்றிய சட்ட அமைச்சகமும், குடியரசுத் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து வழக்குரைஞர்களும் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

