ஒகேனக்கல், ஏப்.27 பொதுவாக பயிற்சிப் பட்டறையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகுப்பு ஒன்று இல்லை நிச்சயமாக இருக்கும். அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற, ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’’யிலும், அந்த வகுப்பு இடம் பெற்றது. ‘கேட்டலும் கிளத்தலும்’ என்ற பெயரில் நடைபெறும் அந்த வகுப்பில், மாணவர்கள் கேட்டிருந்த பல்வேறு கேள்விகளுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரிய விடையளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, நல்ல கேள்விகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
‘‘பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு’’
தருமபுரி, அரூர் கழக மாவட்டங்கள் சார்பாக, ஒகேனக்கலில் 25.04.2026 – 26.04.2026 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில், ‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’ ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளில், முதல் வகுப்பில், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் சாதனைகள்’’ எனும் தலைப்பில், பேராசிரியர் நம்.சீனிவாசன், அடுத்து, ‘‘பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு’’ எனும் தலைப்பில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பின்னர், ‘‘கழகப் போராட்டங்கள்’’ எனும் தலைப்பில், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர். நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் விடையளிக்கும், ‘கேட்டலும் கிளத்த லும்’ வகுப்பு நடைபெற்றது.
முன்னதாக, கழகத் தலைவர் வகுப்பறைக்கு வந்த பின்னர் மாணவர்கள், மாணவிகள், பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என, கழகத் தலைவருடன் தனித்தனியாக குழு ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர். நிறைவாக, கழகத் தலைவர் 12.15 மணிக்கு, ‘கேட்டலும் கிளத்தலும்’ வகுப்பிற்கான மாண வர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசினார்.

‘‘தாழ்த்தப்பட்ட மக்கள்
இந்துக்கள் அல்ல, ஏன்?’’
இந்த வகுப்பில், ‘‘தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இட ஒதுக்கீடு எப்படி வந்தது?’’, ‘‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல, ஏன்?’’, ‘‘திராவிடர் கழகம் பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தை வீரியமாக முன்னெடுக்குமா?’’, ‘‘ஆசிரியர் அய்யாவுக்கு 10 வயதிலேயே பேச்சுத் திறன் வந்தது எப்படி?’’, ‘‘சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்கின்றனரே, இது சரியா?’’, ‘‘உங்கள் இயற்பெயர் என்ன?’’, ‘‘இன்றைய தலைமுறையினர் பெரியாரை எப்படி பார்க்கின்றனர்?’’, ‘‘எத்தனை முறை சிறை சென்றிருக்கிறீர்கள்?’’, ‘‘இந்து என்ற சொல் எந்த மொழியைச் சார்ந்தது?’’ ஆகிய கேள்விகளை எழுதி கேட்டிருந்தனர். மாணவர்களின் கேள்விகளை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாசித்தார். கழகத் தலைவர் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விரிவான விடைகளை அளித்தார். ‘‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல, ஏன்?’’ எனும் கேள்விக்கு, பாராட்டுகளைத் தெரிவித்தார்.
69% இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்கு, அப்போது பிரதமராக இல்லாத சமூக நீதிக் காவலர் வி.பி.சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயி ஆகியோரின் வரலாற்றுத் தொடர்பையும், ஆந்திரத்து பார்ப்பனரான பிரதமர் நரசிம்ம ராவ், உத்தரப்பிரதேசத்துப் பார்ப்பனரான குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பார்ப்ப னரான ஜெயலலிதா ஆகிய இந்த இந்த மூன்று பார்ப்பனர்களும் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதே, இதை திராவிடர் கழகம் சாதித்தது எப்படி? என்ற வரலாற்று சம்பவத்தை விரிவாக விவரித்தார். அதற்கு தி.மு.க. போன்ற முற்போக்கு அமைப்புகள் ஆதரவாக இருந்ததையும் நினைவூட்டினார். நிறைவாக, ‘‘அரசாங்கங்கள் தான் சட்டம் இயற்றும். ஆனால், திராவிடர் கழகம் எழுதிக் கொடுத்த சட்ட முன்

