தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை;
தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு!
அவர்களது முழு உணர்வாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!
வேலூர், ஏப்.15- தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப் போராட இப்போது யார் இருக்கிறார்கள்? தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு! அவர்களது முழு உணர்வாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று (14.4.2026) வேலூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார ்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவரது தேர்தல் பரப்புரை வருமாறு:
தமிழ்நாடு என்பதை வெறும் மாநிலமாகவோ, நிலப்பரப்பாகவோ மட்டும் பார்க்கக் கூடாது! எட்டுக் கோடி தமிழ்மக்களின் உணர்வும், உரிமைக்குரலும்தான் தமிழ்நாடு! தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைத்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது!
நாவடக்கமின்றி பேசுகிறார் பியூஷ் கோயல்!
நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து குறித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கின்ற பாசிச, நாசகார வேலைகள் குறித்துப் பேசினால், “படிப்பறிவற்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார் பியூஷ் கோயல் அவர்கள். மிகவும் திமிர்த் தனமாக நாவடக்கமின்றிப் பேசுகிறார்.
பியூஷ் கோயல் அவர்களே… நாவை அடக்கிப் பேசுங்கள்! நீங்கள் தமிழ்நாட்டு பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இன்–சார்ஜ். அதை மறந்துவிட்டு, அத்துமீறி வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… இங்கு மரியாதை கொடுத்தால்தான், திரும்ப மரியாதை கிடைக்கும்! பா.ஜ.க. தமிழ்நாட்டை பற்றித் தவறாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறது!
தமிழர்கள் அறிவானவர்கள் –
சுயமரியாதை மிக்கவர்கள்!
மாண்புமிகு பிரதமர் அவர்களே… உங்கள் முன்னால் கைகட்டிக்கொண்டு அடிமையாக இருக்கிறார்களே சிலர்… அவர்களை வைத்துத் தமிழ்நாட்டைக் குறைத்து எடைபோடாதீர்கள்… தமிழர்கள் அறிவானவர்கள் – சுயமரியாதை மிக்கவர்கள்! எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால், டில்லியில் இருக்கும் உங்களது ஆணவத்துக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்கும்!
முழு உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!
தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப் போராட இப்போது யார் இருக்கிறார்கள்? தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு! அவர்களது முழு உணர்வாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்! அவர்களது ஆற்றல் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ரூபத்தில் என்கூட இருக்கிறது! கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழ்நாட்டினது, தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

