‘திராவிட மண்’, ‘திராவிட மண்’ என்று பீத்துகிறீர்களே, அது என்ன ‘திராவிட மண்’ – அதற்குக் கொம்பு முளைத்தி ருக்கிறதா என்று சங்கிகள் சந்து முனைகளில் கசமுசா என்று கர்ச்சிப்பார்கள்.
மதக் கலவரங்களைத் தூண்டி, ‘மஞ்சள் குளிக்கலாம்’ என்று மனப்பால் குடித்துக் கிடக்கின்றனர்.
‘திருப்பரங்குன்றம்’ தீபம் அல்வா மாதிரி கிடைத்திருக்கிறது. இதை வைத்து ஒரு கை பார்க்கலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தனர்.
நீதிமன்றமும் நேசக்கரம் நீட்டுவதால், ‘அடிடா சக்கை’ என்று ஆட்டம் போட்டுப் பார்த்தனர். அதுவும் பிசுபிசுத்துப் போய்விட்டது!
உள்ளூர் மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள் – ‘‘நாங்கள் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிக் கொண்டு இருக்கிறோம். வெளியூர்க்காரர்கள் இங்க வந்து ‘சில்மிசம்’ பண்ண வேண்டாம்’’ என்று எச்சரித்தனர்.
கடையடைப்பு என்று வழக்கமான பாணியில் சங்கிகள் குரல் கொடுத்தனர். கதை கந்தலாய் ஆனதுதான் மிச்சம்!
என்னென்னவெல்லாம் செய்து பார்க்கிறோம் – பாச்சா பலிக்கவில்லையே என்று பம்முகிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக் காலம் தந்தை பெரியாரின் சுயமரி யாதை இயக்கம் இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறது.
வடக்கத்தி சப்பாத்தி சமாச்சாரம் எடுபடவில்லையே! மதக் கலவரமாவது, மண்ணாங்கட்டியாவது, ‘உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே’ என்று சங் பரிவார்க் கும்பலை ஊர் எல்லை வரை துரத்தினர் தமிழ்நாட்டு மக்கள்.
இதோ ஓர் எடுத்துக்காட்டு, ‘தினத்தந்தி’, 6.4.2026,
4 ஆம் பக்கம் வெளிவந்த செய்தி:
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக
முருகன் கோவிலில்
சந்தனம் பூசிய முஸ்லிம்கள்
ராசிபுரம், ஏப்.6 நாமக்கமல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டம் நடைபெறும் நாளன்று இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசிக் கொள்ளும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சியும், மத நல்லிணக்க நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராசிபுரம் அச்சுக்கட்டு தெருவைச் சேர்ந்த முஸ்லிம்களும், கோவில் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் சந்தனத்தைப் பூசிக்கொண்டனர்.
முன்னதாக பூ, தேங்காய் மற்றும் பழத்தட்டுகளுடன் இந்துக்களும், முஸ்லிம்களும் குருசாமிபாளையம் பகுதிகளில் உள்ள வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் சுவர்களில் சந்தனத்தை அவர்கள் பூசினார்கள். பின்னர் இறுதியாக குருசாமிபாளையம் பாவடி மைதானத்தில் சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், முஸ்லிம்கள், இந்துக்களின் குழந்தைகளுக்குத் துவா செய்ததையும் காண முடிந்தது.
மதவாதத்தை வைத்து அரசியல் மசாலா செய்து ஜமாய்க்கலாம் என்று குத்தாட்டம் போடும் கும்பலுக்கு இது சமர்ப்பணம்!
மதம் வேறு – ஆனால், மனம் வேறு. அவரவர் மதம் அவரவர்களுக்கு!
அதனால்தான் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒரு வருக்கொருவர் சந்தனம் பூசி தங்களின் சகோதரப் பாசத்தைக் காட்டிக் கொள்கின்றனர்.
‘மாமா’ என்று அழைத்துக் கொள்வர்!
இப்படிப்பட்ட மக்கள் வாழும் இந்தத் ‘திராவிடப் பூமியில்’ விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டால், முதலுக்கும் மோசம் போய்விடும், எச்சரிக்கை!

