நகரி, மார்ச் 31- தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி அய்ஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, 29.3.2026 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென காணாமல் போனார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் சைலஜா, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார்.
இதற்கிடையே, வீட்டில் மது ஹசிதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சிவபெருமான் என்னை அழைக்கிறார், அதனால் நான் சென்று கொண்டிருக்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மேடுபள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மாணவி முன்பு வசித்த லாலா பேட்டை பகுதியில் ஒரு வாலிபருடன் பழகி வந்ததும், குடும்பத்தினர் கண்டித்ததால் கடந்த 10 மாதங்களாக அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்த மது ஹசிதா. கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானத்தில் இருப்பது போலவே இருந்துள்ளார். சிவபெருமான் அழைப்பதாக கூறி காணாமல் போன மாணவியை காவல்துறையினரின் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்:
இந்தியப் பங்குசந்தைகள் பெரும் வீழ்ச்சி
முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி!
மும்பை, மார்ச் 31- உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, நேற்று இந்தியப் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
திங்களன்று (30.3.2026) வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வளைகுடா நாடுகளில் போர் மூளும் அபாயம் இருப்பதால், கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சமும், அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும் சந்தையைத் தொடர்ந்து கீழ்நோக்கித் தள்ளி வருகின்றன. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
