புதுடில்லி, மார்ச் 19- அரசு அதிகாரி ஒருவர் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்வழக்கானது விசாரணை நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளும், உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளும், உச்ச நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளும் நீடித்தது.
கலால் (excise) துறையில் பணியாற்றிய அதிகாரி, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 500 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, 2006 மார்ச்சில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2012ஆம் ஏப்ரல் மாதம் தண்டனையை உறுதிசெய்தது. அதனைத் தொடர்ந்து, தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அங்குக் கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அவரது மனு, 21 முறை வெவ்வேறு அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இறுதியில், நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், பி.பி. வராலே அடங்கிய அமர்வு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியது. ஆயினும், குற்றவாளிக்குத் தற்போது 75 வயதாகிவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட ஈராண்டுச் சிறைத்தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.
தமக்கு 40 வயதாக இருந்தபோது குற்றமிழைத்த அந்த அதிகாரி, தற்போது முதியவராகிவிட்டதால் மனிதநேய அடிப்படையில் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அமர்வு தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!
சென்னையில் 40 இடங்களில் ‘பசுமைப் பந்தல்’ அமைப்பு
மாநகராட்சி நடவடிக்கை!
சென்னை, மார்ச் 19- சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் உடல் சோர்வுக்கும், வெப்ப பாதிப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, போக்குவரத்து சந்திப்புகளில் (சிக்னல்களில்) சிகப்பு விளக்கு எரியும் போது, நிழல் இன்றி நீண்ட நேரம் காத்திருப்பது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி கடந்த 2024ஆம் ஆண்டு முதலே சிக்னல்களில் ‘பசுமைப் பந்தல்கள்’ அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு 18 முக்கியப் போக்குவரத்து சிக்னல்களில் ‘பசுமைப் பந்தல்கள்’ அமைக்கப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டு இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் மொத்தம் 40 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது 8 இடங்களில் பந்தல் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.22 இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மீதமுள்ள 10 இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பசுமைப் பந்தல்கள் மூலம் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் நேரடித் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதால், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
திருப்பரங்குன்றம் ‘தீபத்தூண்’ விவகாரம்
தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை!
மதுரை, மார்ச் 19- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் மீதும் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் 17.3.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நபர்கள் சிலர் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவு உட்பட தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடைவிதித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
