புதுடில்லி, மார்ச் 11- சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் முறையான படிநிலைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் திறன் சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
தற்போது சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், புதிய கல்வி கொள்கையின் கீழ் மதிப்பீட்டு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அளித்துள்ள விளக்கங்கள், தேர்வெழுதும் மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளன.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைப் பொறுத்தவரை, இறுதி விடை சரியாக இருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. ஆனால், ஒரு கேள்விக்கான இறுதி விடை தவறாக இருந்தாலும், அந்த கணக்கை அல்லது தீர்வை அணுகிய முறை சரியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு சரியான படிநிலைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சன்யம் பரத்வாஜ் தெளிவுபடுத்தியுள்ளார். இது மாணவர்களின் பாடப்புரிதலுக்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குகிறது.
அழகான கையெழுத்திற்காகத் தனியாகக் கூடுதல் மதிப்பெண்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், விடைகளைத் தெளிவாகவும், திருத்தங்கள் இல்லாமலும் எழுதுவது திருத்துபவர்களுக்குப் புரிதலை எளிதாக்கும். இது தவறான புரிதலால் மதிப்பெண்கள் குறைவதைத் தவிர்க்க உதவும். விடைகளை எழுதுவதற்கு நீல நிற பால்பாயிண்ட் பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை ஒரே ஒரு கோட்டினால் மட்டும் அடித்து நீக்க வேண்டும். விடைத்தாளில் மை சிந்துவது அல்லது அடையாளக் குறிகளை இடுவது போன்ற செயல்கள் முறைகேடாகக் கருதப்பட வாய்ப்புள்ளதால், நீண்ட காலம் அழியாத தரமான மையைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
புதிய கல்வி கொள்கையின்படி, மனப்பாடம் செய்யும் முறையைத் தவிர்த்து, பாடத்தைப் புரிந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் திறனைச் சோதிக்கும் வகையில் வினாத்தாள்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 50 சதவீத கேள்விகள் இத்தகைய திறன் சார்ந்த வினாக்களாகவே கேட்கப்படுகின்றன. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்காது என்பதை உறுதி செய்ய, இந்த மாற்றங்கள் படிப்படியாகவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய மாற்றங்களுக்கு மாணவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள ஏதுவாக, சிபிஎஸ்இ வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள், மதிப்பெண் வழங்கும் முறைகள் மற்றும் பயிற்சி கையேடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும், ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளத் தயாராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
