மதுரை, மார்ச் 4- மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயாராக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதனால், வேறு வழியில்லாமல் அதிமுகவில் 3 முறை முதலமைச்சராகப் பதவி வகித்திருந்தபோதும், ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மதுரை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்னண் உள்ளிட்டோரும் சேர்ந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை தி.மு.க.வில் இணைக்கும் பணிகளில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இணைப்பு விழா, தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரைக்கு அருகே வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
