சென்னை, பிப்.14– என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 442 கோடி ரூபாய் முறைகேடு குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஅய்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.442 கோடி முறைகேடு
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், ரூ.442 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஅய்-யிடம் புகார் அளித்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஅய்-க்கு உத்தரவிடக் கோரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், சாம்பல் விற்பனை, ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, காலாவதியான ஒப்பந்தங்களின் காலத்தை நீட்டித்தது; 73,000 டன் அளவுக்கு செம்மண்ணை சட்டவிரோதமாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் என்.எல்.சி. அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
சி.பி.அய்.விசாரணை
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தனது புகார் தொடர்பான முழு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை என்றும் சிபிஅய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரம் இல்லாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாருக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, சிபிஅய் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஅய்-க்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதா?
விஜய் மல்லையா
நாடு திரும்ப வேண்டும்
மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
மும்பை, பிப்.14- பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கண்டிப்பாக இந்தியா திரும்ப வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு நிவாரணம் கோர முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, இரண்டாயிரத்து பதினாறில் அவர் அய்ரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார் . கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும், தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும் இரு மனுக்களை மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது . இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்த போது , இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனில், அவர் நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு 12.2.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விஜய் மல்லையா கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும். அவர் நாடு திரும்பாவிட்டால் இந்த மனுவை விசாரிக்க மாட்டோம். நீங்கள் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்கிறீர்கள். வேண்டுமென்றே நீதிமன்ற நடவடிக்கையை புறக்கணித்து விட்டு, நிவாரணம் கோர முடியாது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம் எனத் தெரிவித்து விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
விஜய் கூட்டம் என்றாலே மரணம்தானா?
ஒருவர் உயிரிழந்த விவகாரம்…
சேலம் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்கள்
– த.வெ.க.வினர் இடையே மோதல்
சேலம், பிப்.14- சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, சில பத்திரிகையாளர்களுக்கும் த.வெ.க. தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. த.வெ.க. தொண்டர்கள் தங்களைத் தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.
மகாராட்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 37 வயது நபர், நேற்று (13.2.2026) சேலத்தில் நடந்த த.வெ.க. கட்சியின் கூட்டத்தின் போது மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த
த.வெ.க.-வினர் மயங்கி விழுந்தவரை அங்கிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
