நற்றமிழ் வளர்த்த நன்னன்
நல்உரை நடையைக் காத்தார்
கற்றலின் முறையைக் கண்டார்
கல்வியின் சிறப்பைச் சொன்னார்
சொற்றமிழ் அருமை யெல்லாம்
துலக்கினார் தெளிவாய் நன்னன்
பற்பல பிழைகள் சுட்டிப்
பழுதற எழுதச் செய்தார்
உயிரெனப் பெரியார் கொள்கை
உணர்வுடன் போற்றி வாழ்ந்தார்
பயின்றிட அறிவு நூல்கள்
பாங்குடன் படைத்தார் நன்னன்
துயின்றிடும் மக்கள் இங்கே
துயிலெழப் பாடம் சொன்னார்
உயர்திணை இணையர் ஏற்பை
உவப்புடன் நடத்தி வைத்தார்
தமிழக முதல்வர் போற்றத்
தமிழரின் தலைவர் வாழ்த்தத்
தமிழ்மகன் அகவை நூறு
திருவிழா சிறப்பாய்க் கண்டோம்
தமிழ்மொழி பெரியார் கொள்கை
தம்மிரு கண்ணாய்க் கொண்டார்
தமிழரின் அன்பைப் பெற்ற
தண்டமிழ் அறிஞர் வாழ்க!
– வேண்மாள் நன்னன்