இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியாரும் – திராவிடர் கழகமுமேயாகும்.
புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 15.01.1949 அன்று திருவள்ளுவர் – குறள் மாநாடு கூட்டப்பட்டது.
பெரியார் வேண்டுகோள்!
“திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமையையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.
திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு; தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரச்சாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது” என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.
நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையேயாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.
எனவே, குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ஈ.வெ.ரா (விடுதலை 10.01.1949)
திருவள்ளுவர் குறள் மாநாடு
காரியக் கூட்டம் மவுண்ட்ரோடு மீரான் சாயபு தெரு கட்டடத்தில் 8.1.1949 அன்று நடந்தது. பெரியார் உட்பட சுமார் 100 பேர் வந்திருந்தனர். சப்-கமிட்டிகளும், தொண்டர் பதிவுகளும் நடந்தன.
1) கொட்டகை சம்பந்தமான காரியங்களும், அணி விரிப்பு, தண்ணீர் வசதி முதலியவைகளும் பொறுப்பேற்க சப்-கமிட்டியாக தோழர்கள் பாவலர் எஸ்.எஸ். அப்துல்காதர், எஸ்.எம். ஜக்ரியா, வீரராகவன், துரைராஜ், எம்.கே.சாமு,
எம்.கே.எஸ். சாயபு தம்பி, வி. முனுசாமி ஆகியோரும்,
2) லைட் (விளக்கு), ரேடியோ, லைட் அணி முதலிய பொறுப்பு ஏற்க தோழர்கள் கூத்தரசன், தலைவர் பரமசிவன், எ.ஆர். சேசாசலம் ஆகியோரும்,
3) வெளியூரிலிருந்து மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு இடம் முதலிய வசதிக்குப் பொறுப்பேற்க தோழர்கள்
பி.வீரராகவன், எ.ஆர்.சேசாசலம் ஆகியோரும்,
4) விளம்பரம், கடிதப் போக்குவரத்து, அழைப்பு, நிகழ்ச்சிக்குறிப்பு ஆகியவை பொறுப்பேற்க புலவர் பு.செல்வராஜ், லிங்கராசு ஆகியோரும்,
இக்காரியங்களைக் காரியக் கவனிப்பு செய்து அடிக்கடி அறிக்கை வெளியிட, தோழர் கள் டாக்டர் கணேசன், கே.கோவிந்தசாமி ஆகியோரும் கேட்டுக் கொண்டு யாவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
குறள் மாநாட்டுத் தொண்டர்கள்
தொண்டர்களாக அந்த இடத்திலேயே சுமார் 50 பேர் அதாவது, தணிகாசலம், வெ.கண்ணன், எம்.குப்புசாமி, தா.வேணுகோபால், லிங்கராசு, எஸ்.பி.டி. திராவிடமணி, சுந்தரவதனம், டி.தாமஸ், சி.கணேசன், எஸ். பழநிவேலு, தெ. அண்ணாமலை, டி.சி.முருகேசன், டி.ராமலிங்கம், பி.ஆர். இராமச்சந்திரன், பி.எஸ். பழநி, சி.எஸ். மோகன சுந்தரம், எஸ்.வி. சீனிவாசன், சி.பிரசாரம், எஸ்எஸ். ராசவேலு, சி.ஆர்.சின்னப்பன், அனந்தசயனம், ரா.சண்முகம், ச.ப.சிவன், கே.மாணிக்கசாமி, எம்.டி.செல்வராசன், ஊ.கு.ராமநாதன், தி.ரா.பழநி, இராமானுஜம், மோகனரங்கம், காசிராசன், எ.இ. சுப்பிரமணியம், டி.எம்.வி. ராஜன், எஸ்.கணேசன், எம்.பி. பாண்டுரங்கம், சி.என்.சண் முகம், என்.கே.குப்புசாமி, எம்.ராஜூ, பெண் தொண்டர்கள் அமைப்புக்கு தோழியர் அலர்மேலம்மாள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
மற்ற காரியங்களைக் கவனிக்க, 10.01.1949 மாலை 5 மணிக்கு பவழக்காரத் தெரு, பாவலர் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்கள் கட்டடத்தில் கூட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் தோழர் மணிமொழியார் நன்றி கூற, கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது.
மேலும் குறள் மாநாட்டு
பெண் தொண்டர்கள்:
- அலமேலு அப்பாதுரை அம்மாள், 2. சுசீலா முத்துக்கிருட்டிணன், 3. டி.பாப்பம்மாள், 4.எம்.எம்.லட்சுமி அம்மாள். மேலும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள்; து. குப்புசாமி, அப்துல் அஜீஸ், டி.கே.க. ராஜன், பி.சோமசுந்தரம், ம.கு. நெடுமாறன், ஏ.தாஸ் , வி. சங்கரன், மகிமை தாஸ், கி.பா.அய்யன், சி.என். கிருட்டிணசாமி, கே.இராமு, பி.டி.ஜனநாயகம், ம. ராஜேசுவரன், ச.வீ.வரதன், எம்.கண்ணன், கொ.பெருமாள், ச.தங்கவேல், ச. சோமசுந்தரம், கே.நடேசன், கே.பி. சந்திரன், மு.சடகோபன், ஆ.சம்பந்தன், ஜி.கணேசன், செ.ஆரோக்கிய தாஸ், ஆர்.சி.சுந்தரராஜி, எம்.சிவஞானம், நா.ரா. பத்மநாபன், ச. சந்திரபாபு, நாகையன், சி.எம்.சுவாமி, ம.இராவணதாஸ், பி.டி.டி. தேவராஜூலு, எஸ்.வி. சண்முகம், பி.எஸ்.பழனி, இ.ஆர்.கோவிந்தசாமி, எம்.எஸ்.சாமிநாதன், கோதண்டன், டி.ஜம்புலிங்கம், சாளை கபீர், ராவணன், துரைக் கண்ணம்மாள்.
நாளை 12.1.1949 மாலை மீரான் சாயபு வீதி மாநாடு காரியாலயக் கட்டடத்தில் தேர்வு நடத்திய பின் கடமை உரை, பயிற்சி நடைபெறும்.
திருவள்ளுவர் குறள் மாநாடு
அறிக்கை (12.1.1949)
மாநாட்டு ஏற்பாடுகள் அதற்குரிய தனித்தனி உட்கழக உறுப்பினர்களால் விரைந்து செய்யப்பட்டு வருகின்றன. பந்தல் வேலை பெரும்பாலும் முடிவு பெற்றுவிட்டது. கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கத்தக்க அளவு பந்தல் போடப்பட்டிருக்கிறது. பந்தலுக்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.
நேற்று பெரியார் அவர்களுடன் தளபதி அண்ணா அவர்களும் நகரசபை உறுப்பினர் வி.முனுசாமி அவர்களும் மற்றும் பல பெரியார்களும் வந்து பந்தலையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பந்தலைப் பார்த்துச் செல்கின்றனர். சென்னை முழுவதும் குறள் மாநாட்டைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மாநாட்டு நுழைவுச் சீட்டுகள் இப்போதிருந்தே விற்பனையாகத் தொடங்கிவிட்டன.
தேவையான அளவுக்கு மேல் 100 தொண்டர்கள் வரை பதிவு பெற்றுள்ளனர். தொண்டு செய்வதில் உண்மையான ஆக்கமும், பற்றும் உள்ள இளைஞர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். மாநாட்டைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர்: செயலாளர், திருவள்ளுவர் குறள் மாநாடு, 1. மீரான் சாயுபு தெரு,மவுண்ட் ரோடு, சென்னை என்ற முகவரிக்கு எழுதுங்கள். இதுவரை நடைபெறாத முறையில் சென்னையில் குறள் மாநாடு நடப்பதற்கான முறையில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஆராய்ச்சிமிக்க சொற்பொழிவுகளை ஆற்ற பேரறிஞர்கள், புலவர் பெருமக்கள் பலர் இசைந்துள்ளார்கள். மாநாடு வெற்றிகரமாகவும், பயனுடையதாகவும், நடைபெற தங்கள் அனைவருடைய கருத்துகளையும் முன்னதாகத் தெரிவிப்பின் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்படும். புலவர்கட்கு அழைப்பிதழ்கள் தலைமைத் தமிழாசிரியர் பேருக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற புலவர்கள் அவர்களிடம் பெற்று கொள்வார்களாக.
-சி.டி.அரசு,காஞ்சி மணிமொழியார், செயலாளர்கள்.
முதல்நாள் மாநாடு (15.01.1949)
மாநாட்டில் கட்சி கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும், உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர். காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும்ப ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 9.45 மணிக்கு நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கை அளித்து உபசரித்தார்கள்.
அனைவரையும் வரவேற்றார் பெரியார்!
சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர்
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் மாநாட்டுப் பந்தலை அடையவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.
சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ். கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலையடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன், அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார். மாநாட்டுச் செயலாளர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இயற்கையானது குறளை
பெரியாரிடம் ஒப்படைத்துள்ளது
-பேராசிரியார் சி. இலக்குவனார்
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக் கூறினார் பேராசிரியர் இலக்குவனார். ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்குக் கதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடையதல்லவென்றும், கம்பனையும் வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும், பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும், ‘உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல்’ என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்சியத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்சியக் கொள்கைகளை விளக்க திரு. லெனின் தோன்றியது போல், வள்ளுவருடைய கருத்துகளுக்கு விரிவுரை வழங்க நம் பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும், அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.
2 ஆம் நாள் மாநாடு
16.1.1949 காலை 9.30 மணிக்கு திரு. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்.
சரியாக 10 மணிக்கு கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் கூறி சக்ரவர்த்தி நயினார் அவர்களை பெரியார் அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வழி மொழிய ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைதட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார். பின்னர் பெரியார் அவர்கள் சிறிது நேரம் பேசிய பின், தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பெரியார் குறளை ஏந்தியது ஏன்?
வரவேற்புரையில் திரு.வி.க.விளக்கம்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திருக்குறளே. திருக்குறளைப் பயின்று பயின்று அதன் உள்ளுரையை உணர உணர திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு மேலும் மேலும் விளங்குவதாகும்.
திருவள்ளுவர் தமிழர். திருக்குறளைத் தமிழில் எழுதினார். இது உறுதி. மிக உறுதி. முழு உறுதி. அய்யமில்லை. இது உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், குறள் தமிழ் நூலன்று. தமிழர் நூலன்று. உலக நூல். உலகப் பொது நூல், சமதர்ம நூல்.
குறளைப் படிக்கும் முன்னர், படிப்பவர் (Sexual Science) பால் அறிவு பெற்ற வராதல் வேண்டும். ஆண்-பெண் சேர்க்கை பற்றிய விஞ்ஞான அறிவின்றி திருக் குறளைப் பயின்றால் குறளின் முழு உண்மையையும் உணர்தல் அரிது. அரிது. குறளைப் பயிலும் முன் மார்க்சிசமும் (Marxism) அறிந்திருத்தல் வேண்டும். மார்க்சிசம் அறியாமல் குறளைப் பயின்றால் பயனில்லை. மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். பிரிந்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். இதுதான் மார்க்ஸ் தத்து வத்தின் அடிப்படை. குறள் நூலின் அடிப்படையும் இதுதான்.
தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் அவர்களே ஆவார். இந்த மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவர் பெரியார் அவர்களே தான். என்னைச் செயற்கை வரவேற்புத் தலைவராக்கிற்று.
சில சமயங்களில் நான் தத்துவம் (Thesis) ஆக இருந்திருக்கிறேன்; அவர் எதிர்த் தத்துவமாக இருந்திருக்கிறார். சில சமயங்களில் நான் (Anti Thesis) ஆக இருந்திருக்கிறேன். அவர் Thesis ஆக இருந்திருக்கிறார். ஆனால், இது போதோ தத்துவம்(Thesis) எதிர் தத்துவம் (Anti – Thesis) இரண்டும் மறைந்து Synthesis (ஒருமைப்பாடு) ஏற்பட்டிருக்கிறது.
பெரியாருடைய அறிவியக்கம் புரட்சி இயக்கம் ; பகுத்தறிவு இயக்கம் தோன்றியது, வளர்ந்தது. எப்படி எப்படியோ சென்றது. நானும் பெரியாரும் பலமுறை போரிட்டோம். ஆனால், அக் காலத்திலேயே நான் சொல்லியது உண்டு. இத்தகைய ஒருமைப்பாடு Synthesis ஏற்படப் போவது உறுதி, உறுதி என்று!
யார் என்ன கூறினாலும் கூறுக. பெரியாருடைய இயக்கம் – அறிவியக்கம், நாடுகளின் எல்லையை, மொழிகளின் எல்லையை, சமயங்களின் எல்லையை, சாதிகளின் எல்லையை, இனங்களின் எல்லையை எல்லா எல்லைகளையும் கடந்தது. அது உலகப் பொது இயக்கம்.
பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.
யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி! உறுதி! என்று உரையாற்றினார் திரு.வி.க.
(விடுதலை, 15.1.1949)
பெரியார் பேருரை:
ஆரியத்தை ஒழிக்கும் ஒப்பற்ற
ஆயுதம் திருக்குறளே!
சொற்பொழிவின் தொடக்கத்திலேயே, தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும். அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்ட போதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக் கொண்டமை, தான் நடந்து கொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத் தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக் கொடுக்கும் வரை சற்று சங்கடம் ஏற்படினும் அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துகள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமே அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.
குறளும் சுயமரியாதையும்
மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை நம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே நமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள் வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாள்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும் இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கி நாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரசாரம் வெற்றி பெற்றுவிட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்து விட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
குறளைக் கொண்டு
வாழ்க்கையை நிர்ணயிப்போம்!
மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டதென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிகமிக மலிந்துவிட்ட தென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும், மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும் அவருக்கே பயன்படாது போய் விட்டமை காரணமாகவேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற விசாரத்தையெயல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டு விட்டோம். குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின் படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
அண்ணாவின் நாடகம்
16.1.1949 இரவு 10 மணிக்குத் அண்ணா அவர்கள் குழுவினரால் ‘சந்திரமோகன்’ என்கிற நாடகம் வள்ளுவர் மாநாட்டுப் பந்தலில் இனிது நடிக்கப் பெற்றது. நாடகத்தைக் காண வேண்டி மக்கள் 7.30 மணி முதற்கொண்டே சூழ்ந்திட ஆரம்பித்து விட்டனர். 9 மணிக்குள்ளாகவே பந்தல் நிறைந்துவிட்டது. இதுவரை இம் மாதிரி பெருந்திரளான மக்களிடையே சென்னையில் நாடகம் நடைபெற்றிருக்க முடியாது என்பது வெளிப்படை. நாடகம் சுமார் 2 மணிக்கு முடிந்தது.
தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில்
திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.அப்பாதுரையார், இலக்குவனார், அ.சக்கரவர்த்தியார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், திருக்குறள் முனுசாமி, பெரும்புலவர் கந்தசாமி (முதலியார்), எஸ்.முத்தையா (முதலியார்), புலவர் குழந்தை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சி.டி.டி.அரசு காஞ்சி மணிமொழியார், டி.கே.சண்முகம், நாவலர் இரா.நெடுஞ்செழியன் முதலியோர் பங்கேற்று உரையாற்றினர்.
பிறகு நடிகர் டி.கே.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக தோழர் க. அன்பழகன் நன்றி கூறினார். மாநாடு நள்ளிரவு 2.30 மணிக்கு முடிவுற்றது.
