ராமேஸ்வரம், ஜன.3 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை யினர் மீண்டும் ஒருமுறை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (2.1.2026) சிறைபிடித்தனர்.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் பன்னாட்டு கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்த தாகக் கூறி 9 மீனவர்களை கைதுசெய்து அவர்களது 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய கைது நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவ குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
