டில்லி,டிச.12 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிறப்பு தீவிர வாக் காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்மாதம் வாதங்களை முடித்து ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.
எஸ்.அய்.ஆர்.மீதான வழக்கு
அதேபோல இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் 17 ஆம் தேதி விசாரணை நடைபெறும் நிலையில் புதிதாக எந்த வழக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எஸ்ஐஆர் நடவடிக்கையை பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் வரவேற் கின்றன. ஆனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எஸ்அய்ஆர் என்பது, ஏற்கெ னவே உள்ள தேர்தல் படிவங்களை கணக்கில் கொள்ளாமல் புதியதாக படிவத்தை உருவாக்குவதாகும். கடந்த மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டது. எஸ்அய்ஆர் நடவடிக்கையால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டிருக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பூர்வாஞ்சல் பகுதியில், குடியுரிமைக்கு ஆதா ரமாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தேர்தல் அதிகாரிகள் மறுத்ததாக புகார் எழுந்தது.
ஆனால், பாட்னா போன்ற நகரங்களில் இந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்படி யெனில் இசுலாமிய வேட்பாளர்கள் வேண்டுமென்றே விடுவிக்கப் படுகிறார்களா? என்றும் கேள்வி எழுந்தது. ஆனால் பாஜகவும், தேர்தல் ஆணையமும் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தன. இந் நிலையில், அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்அய்ஆர் பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பீகார் மாநிலத்தில் எஸ்அய்ஆர் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை போல, தமிழ்நாட்டிலும் இந்த நட வடிக்கைக்கு கடும் எதிர்ப்பை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. எதிர்ப்பு தெரிவித்ததோடு நிற்காமல், உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக மட்டுமல்லாது எஸ்அய்ஆர் நடக்கும் மாநிலங்களில் செயல்படும் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவையும் இதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கு நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ்.அய்.ஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
