பாபர் மசூதியை இடித்த நாள் வீர தினமா? இந்திய இராணுவத்தின் வீர தினத்தை அபகரிக்கப் பார்த்த ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு!

2 Min Read

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-அய் வீர தினமாகக் (சவுர்ய திவாஸ்) கொண்டாடச் சொல்லி ராஜஸ்தானை ஆளும் பாரதிய ஜனதா அரசு உத்தரவிட்டது.

இந்திய கலாச்சாரப் பெருமை ராமர் கோயில் இயக்கம் போன்ற தலைப்புகளில் கலைப் போட்டிகள், ஓவியம் மற்றும் குறும்படப் போட்டிகள் நடத்துவதற்கும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்தன. இதையடுத்து, 2025 நவம்பர் 29-ஆம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உத்தரவு, 30-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது. “எதிர்பாராத சூழ்நிலைகளால் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்றும், “எல்லா பள்ளிகளிலும் பரீட்சைகள் நடைபெறுவதால், இதில் மற்ற எந்த நிகழ்ச்சிகளும் நடைபெற முடியாது. எனவே, ‘சவுர்ய தினம்’ கொண்டாடும் திட்டங்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன” என்றும் அம் மாநிலத்தின் பள்ளி கல்வி அமைச்சர் திலவர்தேவ் ராஜ் தெரிவித்தார். இந்த அரசு, பாபர் மசூதி இடிப்பை வீர தினமாக நினைவுகூற விரும்புகிறது. இது மத அமைதியை அழிக்கும்” என்று காங்கிரஸ் மாநில தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க., பாபர் மசூதி இடிப்பைப் பள்ளிக் கூடத்தில் பெருமையாகத் திணிப்பது இது முதன்முறையல்ல! உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போதே ‘10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் இத்தனை நாளாகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாளாகும்?’’ என்று பாடத்தில் கேள்வி கேட்டார்கள்.

சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத் திட்டத்தில், ‘‘முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?’’ என்றும், ‘பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது, முலாயம் சிங்கைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்?” (‘அவுட் லுக்’ 10.5.1999) என்றும் பாடத்தில் கேள்விகள் வைத்து தங்கள் மதவாத நஞ்சைப் பிஞ்சு மனங்களில் விதைத்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினர்!

ஆனால், ராஜஸ்தான் அரசின் இந்தச் செயல் இன்னொரு வகையிலும் மோசடியானது. மோசடி மட்டுமல்ல, இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். ஏனெனில், சவுர்ய திவாஸ் என்பது இந்திய ராணுவத்தில் ‘வீர தினம்’ ஆக அக்டோபர் 27-ஆம் தேதியன்று கொண்டாடப்படுவதாகும்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையெடுப்பாளர்களை முறியடிக்க ஜம்மு காஷ்மீருக்கு முதல் இந்திய துருப்புக்கள் சென்றதைக் குறிக்கும் வகையில், ‘சவுர்ய திவாஸ்’ (வீர தினம்) இந்திய இராணுவத்தால் கொண்டாடப்படுகிறது. சிறீநகர் விமான நிலையத்தைப் பாதுகாத்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் படையெடுப்பாளர்களை விரட்டியடித்து, ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிய இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி சவுர்ய திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் பெரும்பாலும் சிறீநகர் அல்லது காஷ்மீரின் பிற முக்கிய இடங்களில் நடைபெறும்.

இந்திய ராணுவத்தின் பெருமைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் வீர தினத்தையும் இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி செயலை நினைவுகூறும் தினமாக அபகரித்துள்ளனர்.

இவர்கள்தான் எதைக் கேட்டாலும், “எல்லையில் நமது ராணுவ வீரர்கள்…” என்று வீரவசனம் பேசுபவர்கள் என்பதையும் நினைத்தால் இவர்களின் போலி முகம் புரியவரும்.

– சமா.இளவரசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *