பரபரப்பு தகவல்கள்
புதுடில்லி, நவ.19 நடந்து முடிந்த பீகார் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்கள் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்தன.
ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இக்கூட் டணியின் வாக்குகளைப் பிரித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாக்குகள்
சிதறியது எப்படி?
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணியின் பெரும்பான்மையான வாக்குகளை பிரித்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. 98 சதவீத வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை பெற்றது. ஒரு தொகுதியில் இரண்டாவது இடத்தையும் 129 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், 73 தொகுதிகளில் நான்காவது இடத்தையும் பெற் றுள்ளது. இவற்றில் 33 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்துள்ளன. இந்த வித்தியாசத்தை விட அதிக வாக்குகளை ஜன் சுராஜ் வேட்பாளர்கள் பெற்றனர். இது மெகா கூட்டணிக்கான வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதுபோல், பிஎஸ்பி பீகாரின் 181 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்வென்றது. ஒரு தொகுதியில் 2ஆம் இடம் பிடித்தது. 20 தொகுதிகளில் பிஎஸ்பிக்கு கிடைத்த வாக்குகள், வெற்றிக்கான வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. இந்த 20 ல் என்டிஏ 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, பிஎஸ்பியின் 90 சதவீத வாக்குகள் என்டிஏவிற்கே வெற்றியை தேடித் தந்துள்ளன.
முஸ்லிம் வாக்குகள்
பீகாரில் சுமார் 20 சதவீத முஸ்லிம்களின் வாக்குகளில் ஒரு பெரும் பகுதியை ஏஅய்எம்அய்எம் தட்டிச் சென்று விட்டது. இக் கட்சிக்கு 9 தொகுதிகளில் அதன் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகள் கிடைத்தன. இதனால், அந்த தொகுதிகளின் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் என்டிஏவிற்கு கிடைத்தன. மெகா கூட்டணிக்கு சுமார் 30% வாக்குகள் இழப்பாகின. கடந்த 2020 தேர்தலில் பெற்ற அதே 5 தொகுதிகளை ஏஅய்எம்அய்எம் பெற்றுள்ளது.
ஒவைசியின் போட்டியால், என்டிஏவின் வாக்குகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான மெகா கூட்டணியின் வாக்குகள் மூன்று பக்கங்களிலும் சிதறடிக் கப்பட்டுள்ளன. பீகாரின் தாழ்த் தப்பட்டோர் சமூக வாக்குகளை பிஎஸ்பியும், ஏஅய்எம்அய்எம் முஸ்லிம் வாக்குகளையும் மெகா கூட்டணியிடமிருந்து பறித்துள்ளன.
ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த், பீகாரின் இளம் வாக்காளர்களை மெகா கூட்டணிக்கு செல்லாமல் தடுத்துள்ளார். இந்த நிலையால், என்டிஏவிற்கு சாதகமான தொகுதிகளில் மெகா கூட்டணியால் நுழைய முடியவில்லை. எனவே, இந்தமுறை பீகார் தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் என்டிஏவின் பெண்களுக்கான அறிவிப்புகளுடன் மூன்று கட்சிகளால் பிரிந்த வாக்குகளும் மெகா கூட்டணியின் மெகா தோல்வியாக மாறிவிட்டது.
