தருமபுரி, அக்.2- தமிழ்நாடு அரசு 2025-2026ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே வெளிநாடுகளில் சென்று படிக்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சென்று படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு அரசு 2025-2026-ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2025-2026ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய கியூ.எஸ். (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்ட படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல், மருத்துவம், பன்னாட்டு வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து முதுகலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.