கோலாலம்பூர், ஆக. 24- மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
கோலா லங்காட் மாவட்டத்தில் 23,8,2025 அன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த ஆறு நண்பர்களும் 16 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என ‘China Press’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச் சென்ற சிறுவன் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், பெரிய பள்ளத்தில் விழுந்து அங்கிருந்த கல்தூண் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், காரை ஓட்டிய சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.