மகாராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா : ஒப்புதல் அளிக்கக்கூடாது ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

viduthalai
1 Min Read

மும்பை, ஜூலை 19 மகாராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று (18.7.2025) கடிதம் வழங்கப்பட்டது.

பொது பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அரசு தனது நிர்வாக அதிகாரங்களை தனிநபருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மகராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா மாநிலத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கட்சிகள் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பேரவை கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகளின்படி சில திருத்தங்களுடன் மகாராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டிருந்தாலும் அது மாநில அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதை இந்த மசோதா இலக்காக கொண்டுள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ‘சட்டவிரோத செயல்கள்’ என்ற விளக்கத்தின் கீழ் எதிர்க்கட்சியினரை அத்துமீறி கைது செய்யவோ அபராதம் விதிக்கவோ முடியும்.

குறிப்பாக இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைப்பதாக கூறி விவசாயிகள், மாணவா் சங்கங்கள், தொழிலாளா் சங்கங்களை முடக்க அரசு முயல்கிறது. பயங்கரவாதம் என்பது ஒரு சாராரின் சித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது அல்ல என்பதை மாநில அரசு உணர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *