தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு நாலு விழுக்காடு இட ஒதுக்கீடு

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 30- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதிபெற்றவர்கள் எவரேனும் இருந்தால் அதன் விவரங்களை ஆய்வு செய்து உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கிடையே தற்போதைய அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2005-2006இல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் மாற்றம் செய்து 2006-2007, 2007-2008, 2008-2009ஆம் கல்வியாண்டுகளில் முதுநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எவரேனும் 4 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்றிருப்பின் அதுகுறித்த விவரங்களையும் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேனாள் படை வீரர்களுக்கு ஜூலை 4 வேலை வாய்ப்பு முகாம்

சென்னை, ஜூன் 30- இந்திய பாதுகாப்பு படைகளின் முன்னாள் வீரர்களுக்காக இந்திய ராணுவத்தின் சார்பில் சென்னை தாம்பரம் விமானப்படை மைதானத்தில் ஜூலை 4ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் மேனாள் படைவீரர்கள் நலத்துறையின் கீழ் இயங்கும் மறுபணியமர்த்தலுக்கான தலைமை இயக்குநரகம் இதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தனியார் துறை, பெருநிறுவனங்கள் போன்றவற்றில் காவல்பணி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் பொருட்கள் மேலாண்மை, சுகாதாரம், நிர்வாகம், பொறியியல் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு பெற இந்த முகாம் உதவும்.

தொழில்நுட்ப திறன்களை…

மேனாள் படை வீரர்கள் நலனில் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளில் வீரர்கள் பெற்ற கட்டுப்பாடு, தலைமைத்துவம் போன்ற பண்புகளுடன், தொழில்நுட்ப திறன்களை சிவிலியன் தொழில்துறைக்கு அவர்கள் வழங்கும் வகையில் இம்முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மேனாள் படைவீரர்கள் மற்றும் பணி அமர்த்த விரும்பும் நிறுவனங்கள் www.esmhire.com என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணையதளத்தில் தங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம், அல்லது மறுபணியமர்த்தலுக்கான தலைமை இயக்குநரகத்தின் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில், Job Fair என்ற பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இளம் வயதிலேயே…

பொதுவாக பாதுகாப்பு படைவீரர்கள் இளம் வயதிலேயே தங்கள் பணிக்காலத்தை நிறைவு செய்து வெளிவருவதால், அவர்கள் பணிபுரிவதற்கான தங்கள் எஞ்சிய காலத்தை தனியார் துறையில் செலவிட இத்தகைய மறுபணியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் நாடு முழுவதும் 18 இடங்களில் இதுபோன்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் முன்னாள் படை வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட உள்ளன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *