தி.மு.க. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியம் இல்லை வைகோ திட்டவட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 30- திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம்

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நடை பெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு தொடரவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும் கூட்டணி என்ற மதிமுக எடுத்த முடிவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைப்பிடிப்போம்.

அரசமைப்பில் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக் குரியது. முருகன் மாநாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்தி வெளியான காணொலிக்கு கடும் கண்டனம்.

திருச்சியில் நடைபெறவுள்ள மேனாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டை வெற்றி கரமாக நடத்துவதற்கும், தேர்தல் வேலைகளை முன்னெடுக்கவும் ஜூலை 1 முதல் 17ஆம் தேதி வரையில் நடைபெறும் மண்டல வாரியான செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு மாவட்ட அமைப்புகள் செயலாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

தமிழ்நாட்டில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அரசுக்கு அவசியமில்லாத வகையில் திமுக வெற்றி பெறுவதற்காக மதிமுக பாடுபடும். பெண்களின் வாக்குகளில் 90 சதவீதம் திமுகவை சென்றடையும். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்போம் என கூட்டத்தில் நான் சொல்லவில்லை. கட்சி அங்கீகாரத்துக்கு 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதற்காக தோராயமாக 12 தொகுதிகளில் போட்டியிடலாம் எனவும், முடிவு தலைமை எடுக்கும் எனவும் முதன்மைச் செயலாளர் கூறியிருந்தார்.

இந்துத்துவா சக்திகள் தமிழ் நாட்டில் காலூன்றக் கூடாது என்பதற்காகவும் திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காகவும் திமுகவுடன் கூட்டணி அமைத்தோம்.

தற்போதும் அதே நிலைப் பாட்டில் இருக்கிறோம். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு போராடி மதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

மதிமுகவினர் விரக்தியில் இல்லை. எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்போம். வரும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறாத நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறும் கூட்டணி ஆட்சி குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *