சுயமரியாதை இயக்கத்தை வீழ்த்தவே முடியாது! திராவிடர் இயக்கம் வளர்வதையும்
தடுக்கவே முடியாது! காரணம் இது அறிவியல் இயக்கம்; அறிவியல் வளர்வதை தடுக்க முடியுமா?
அரியலூர், ஜூன் 28 சுயமரியாதை இயக்கத்தை வீழ்த்தவே முடியாது! தந்தை பெரியார்; திராவிடர் இயக்கம் வளர்வதையும் தடுக்கவே முடியாது! காரணம் இது அறிவியல் இயக்கம்; அறிவியல் வளர்வதை தடுக்க முடியுமா? என்று செந்துறையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் திறந்தவெளி மாநாடாக நேற்று (27.06.2025) மாலை செந்துறை பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில், செந்துறை ஒன்றியத் தலைவர் முத்தமிழ்ச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அங்கனூர் சிவா, சி.பி.அய்.எம். ஒன்றிய செயலாளர் அர்ச்சுனன், காங்கிரஸ் கட்சி குன்னம் தொகுதி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
சுயமரியாதை இயக்கம் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?
நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், மேடையின் வலது பக்கம் வைக்கப்பட்டிருந்த 87 சுயமரியாதைச் சுடரொளிகளின் பட்டியல் அடங்கிய பதாகையைச் சுட்டிக்காட்டி, “அவர்கள் போட்டுக்கொடுத்த மேடையில் அமர்ந்துதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறி, சுயமரியாதை இயக்கத்தின் பெருமையை பறை சாற்றினார். தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள இருந்து, அவரின் பல்வேறு பணிகள் காரணமாக வர இயலாமல் போனதைச் சுட்டிக்காட்டி, “அவர் வந்தாலும், வராவிட்டாலும் என்றுமே நம்முடையவர்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். மேலும் அவர், மாநாட்டின் தலைப்பை எடுத்துரைத்து, “ஏன் சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட வேண்டும்?” என்று கேள்வி கேட்டு, ‘‘பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும், பெற வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடவும் வேண்டும் என்பதை நினைவு கூறவதற்காகத்தான் சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்” என்று 100 ஆண்டு கால வரலாற்றை மிக மிகச் சுருக்கமாக எடுத்துரைத்து மாநாட்டின் நோக்கத்தை ஆழமாகப் புரியவைத்தார்.
ஜாதியை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம்!
மேலும் அவர், நீதிக்கட்சியின் நீட்சியான இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் பெருமையை சுட்டிக்காட்ட ஒரு புதிய வரலாற்றுத் தகவலை மாநாட்டினரிடம் பகிர்ந்துகொண்டார். அதாவது, ‘தந்தை பெரியாருக்கு நாடகம் பார்ப்பதில் விருப்பம் இருந்ததைப் போலவே, சர்க்கஸ் பார்ப்பதிலும் விருப்பம் உண்டு’ என்பதுதான் அந்தத் தகவல். இதை சொல்லிவிட்டு, “அந்த சர்க்கஸில் ஒரு பெரிய கூண்டு இருக்கும். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மேலும் கீழுமாக வேகமாக ஓட்டி சாதனை செய்வார். அதுபோல, நம் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் பல்வேறு இடையூறுகளுக்கிடையே மாபெரும் சாதனைகள் படைத்துவருகிறார்” என்று ஒப்பிட்டுப் பேசி, இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ‘ஆரிய மாடலால்’ ஏற்பட்டுவரும் தொல்லைகளை, ஒரு உவமை மூலம் எளிமையாக விளக்கினார். சுயமரியாதை இயக்கம் பிறந்ததற்குக் காரணமான ஜாதியின் கொடுமைகளை நினைவு படுத்தி, ‘‘இதை ஒழிக்கத்தான் நூறாண்டுகளாக பாடுபட்டு வருகிறது சுயமரியாதை இயக்கம்; திராவிடர் இயக்கம். இந்த ஜாதியைக் காட்டித்தான் நம்மை படிக்காதே என்றனர். அதையெல்லாம் தகர்த்துதான் நாம் இன்று முன்னேறியிருக்கின்றோம்” என்றார் அழுத்தம் திருத்தமாக. அந்தக் கூற்றிலிருந்த உண்மையால் உந்தப்பட்ட மக்கள் தம்மை மறந்து கைதட்டி ஆசிரியரின் கூற்றை ஏற்றனர். ‘‘இவற்றை மீண்டும் கொண்டு வரத்தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஆகியவை முயற்சி செய்கின்றன” என்றும் சொல்லி இன்னமும் ஆபத்து அகலவில்லை என்பதை நினைவூட்டினார். மக்களும் அதை ஆமோதிக்கும் படி உடல் மொழியால் பதிலளித்தனர்.
காமராஜரின் கண்ணீரைத் துடைத்த சுயமரியாதை இயக்கம்!
தொடர்ந்து ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம்; அதிலிருந்து மீண்டது; அகில இந்திய பதவிக்கு காமராஜர் சென்றது; வடநாட்டில் இன்றைக்கு என்ன சட்டை போடுவது என்பதைக்கூட ஜோசியரைக் கேட்டு அணிவது என்ற நிலைமைகளை காமராஜரே சொல்லி வருத்தப்பட்டது; இந்திய துணைக் கண்டத்தில் உள்ள வடநாட்டு மக்களை திருத்த 100 பெரியார் தேவை என்று காமராஜர் வெளிப்படையாகச் சொன்னது; ‘காமராஜர் சிந்தும் கண்ணீரை கருஞ்சட்டைப் படை துடைக்கும்’ என்று பேரறிஞர் அண்ணா எழுதியது; 1925 இல் காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் என்ன காரணத்திற்காக வெளியேறினாரோ அதை இப்போது வலியுறுத்தி வரும் இளந்தலைவர் ராகுல் காந்தி; ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்று கூப்பாடு போட்ட அதே பிரதமர் மோடி, இன்று தலைகீழாக மாறியிருப்பது என்று சமூக, அரசியல் வரலாற்றின் பக்கங்களை அடுக்கடுக்காக புரட்டிக்காட்டி, “இன்னும் நான்கு முறை மதுரை மாநாடுகளை நடத்துங்கள். 200 அல்ல, 234 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுயமரியாதை இயக்கத்தை வீழ்த்தவே முடியாது. காரணம் சுயமரியாதை இயக்கம் ஓர் அறிவியல் இயக்கம்! அறிவியலைத் தடுக்க முடியாது. அதுபோலத்தான் சுயமரியாதை இயக்கம்; திராவிடர் இயக்கம் வளர்வதைத் தடுக்க முடியாது. என்றைக்கு இருந்தாலும் எங்கள் வழிக்கு வந்துதான் ஆகவேண்டும்” என்று அதிரடியாகப் பேசி நிறைவு செய்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!
கழக மாவட்டக் காப்பாளர்கள் ஜெயங்கொண்டம் காமராஜ், மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரத்தின இராமச்சந்திரன், இராஜா அசோகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன். செந்தில்குமார், க.கார்த்திகேயன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன் இணைப்புரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மேடை ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.
சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக்களில் அறிமுகம் செய்யப்பட்டுவரும் 6 புத்தகங்களின் தொகுப்பு இந்நிகழ்விலும் அறிமுகம் செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தி.மு.க. சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகரன் உள்ளிட்ட அனைவரும் உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ‘விடுதலை’ சந்தாக்கள், ‘பெரியார் உலகம்’ நன்கொடை ஆகியவை கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டன.
முன்னதாக மாலை 5 மணியளவில் மக்களிசைக் கலைஞர், திரைப்படப் புகழ் உறந்தை கருங்குயில் கணேஷ் குழுவினர் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். நிகழ்வில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவர் ஆசிரியர் எடுத்த சமூக, அரசியல் பாடத்தை கவனமாக கேட்டுப் பயன் பெற்றனர்.
நிறைவாக ஒன்றியச் செயலாளர் செல்வக்குமார் நன்றியுரை கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
கழகத் தலைவர் நள்ளிரவுக்கு மேல் திருச்சி பெரியார் மாளிகைக்கு தோழர்களுடன் வந்தடைந்தார்.