துபாய், ஜூன்.24- தனது அணுசக்தி தளங் களை தாக்கிய அமெரிக்காவுக்கு பதிலடியாக, அந்த நாட்டு படைகளை குறி வைத்து ஈரான் நேற்று (23.6.2025) இரவு தாக்குதல் நடத்தியது.
3 அணுசக்தி தளங்கள் தகர்ப்பு
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணு சக்தி தளங்களை தாக்கியது.
குறிப்பாக போர்டோ அணு சக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவு கணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறி வித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்களுக்கு உரிமை உண்டு எனவும் கூறியது.
வான்பகுதி மூடல்
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் படை களுக்கு அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக நேற்று அந்த நாட்டின் கூட்டுப்படை தளபதி அப்துல் ரகிம் மவுசவி அறிவித்து இருந்தார்.
இதனால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் ஈரானின் ஏவுகணைகள் எட்டும் தூரத்திலேயே உள்ளன.
ஈரானின் இந்த எச்சரிக் கையை தொடர்ந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் அரசு தனது வான் எல்லையை மூடிவிட்டது.
அதிரடித் தாக்குதல்
ஆனால் இதையும் மீறி ஈரான் ராணுவம் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது.
இதைப்போல ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை.
அமெரிக்கா படைத்தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியதை ஈரான் அரசு தொலைக் காட்சி வெளியிட்டது.இது தொடர்பான காட்சிப் பதிவுகளை ஒளிபரப்பியது.
வெற்றிகரமான பதிலடி
அதில், ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரான் ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதிலடி’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தங்கள் மீது அமெரிக்கா போட்ட வெடிகுண்டுகளின் எண் ணிக்கையிலான குண்டுகளை அந்த நாட்டு படைகள் மீது வீசியதாக ஈரான் கூறியுள்ளது.
இதற்கு அமெரிக்க தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தங்கள் படைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக ஈரான் தாக்கினால் மீண்டும் தாக்கு வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்ெகனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.