பாட்னா, ஜூன் 8- இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
குற்ற தலைநகரம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 7.6.2025 அன்று பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் ராஜ்கிரில் நடந்த காங்கிரஸ் பிரசார இயக்கத்தில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது:-
பீகார் மாநிலம் ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதிக்கான நகரமாக இருந்தது. ஆனால் இன்று நாட்டின் குற்ற தலைநகரமாக மாற்றி விட்டார்கள்.
மோடி அரசு ஒருபோதும் உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது அவர்களது அரசியல் முடிந்து விடும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பில்
2 மாடல்கள்
2 மாடல்கள்
ஜாதிவாரி கணக்கெடுப்பில் 2 மாடல்கள் இருக்கின்றன. ஒன்று, தெலங்கானா மாடல், இன்னொன்று பா.ஜனதா மாடல்.
பா.ஜனதா மாடலில், அதிகாரிகள் மூடப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து கேள்விகளை தயாரிப்பார்கள். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினங்களை சேர்ந்த அதிகாரிகளை அதில் சேர்க்க மாட்டார்கள்.
அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஒட்டு மொத்த நலனுக்காகவும் நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை கோரி வருகிறேன். நாம் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் இடங்களில் எல்லாம் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும். அப்பணி, பீகாரில் இருந்து தொடங்கும்.
சரண் அடைந்துவிட்டார்
பிரதமர் மோடி, தனது பேச்சின்போது தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்டவர் என்கிறார். மற்றொரு புறம், இந்தியாவில் ஜாதியே கிடையாது என்கிறார். பிறகு எப்படி அவர் இதர பிற்படுத்தப்பட்டவராக இருக்க முடியும்?
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடந்த போது, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் பிரதமர் மோடி சரண் அடைந்து விட்டார்.
சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை பகிரங்கமாக அறிவித்து விட்டார். ஆனால், பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.அவர் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.