பெரியகுளம், ஜூன் 8- பணத்தை இரட்டிப்பு ஆக்கி தருவதாக கூறிய மந்திரவாதியிடம் நண்பர்கள் 2 பேர் ரூ. 10 லட்சத்தை பறிகொடுத்தனர். இது தொடர்பாக மந்திரவாதியையும் அவருடைய மகனும் கைது செய்யப் பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 51). இவர், திருமங்கலத்தில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
மதுரை மாவட்டம் புளியங் குளத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆட் களை வேலைக்கு சேர்த்துவிடும் ஏஜெண்டாகவும் வேலை செய்து வந்தார். அந்த வகையில் முருகேஸ்வரி அழகர்சாமியின் நிறுவனத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன்மூலம் அவருடன், அழகர்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
பணம் இரட்டிப்பு பூஜை
இந்த நிலையில் அழகர்சாமிக்கும், அவரது நண்பர் பொன்ராஜூக்கும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதனை அறிந்துக்கொண்ட முரு கேஸ்வரி, தனக்கு தெரிந்த நபர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ளார். அவர் மாந்திரீக பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பிய 2 பேரும், மாந்திரீகம் செய்யும் பூசாரியிடம் அழைத்துச் செல்லும்படிகூறினர்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி முருகேஸ்வரி, அவர்கள் 2 பேரையும். அழைத்துக்கொண்டு பெரியகுளம் அருகே உள்ள டி-கள்ளிப்பட்டி நெடுஞ்செழியன் தெருவை சேர்த்த மாந்திரீக பூசாரியான சித்தார்த்தன் (30) என்பவரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் பூசாரியை சந்தித்த அழகர்சாமியும் பொன் ராஜூவும் தாங்கள் குறிப்பிட்டதொகையை தருவதாகவும்.அதனை இரட்டிப்பாக்கி தருமாறும் கூறினர்.
ரூ. 10 லட்சம்
இதையடுத்து 2பேரும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மற்றும் ரொக்கமாக ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் என மொத்தம் ரூ.9 லட்சத்து 84 ஆயிரத்தை சித்தார்த் தனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட சித்தார்த்தன் கடந்த 1ஆம் தேதி தனது வீட்டில் பூஜை நடத்தவுள்ளதாகவும், அதில் பங்கேற்க வருமாறும் கூறினார்.
அவர் கூறியபடி கடந்த 1ஆம் தேதி அழகர்சாமியும். பொன்ராஜூவும் டி-கள்ளிப்பட்டியில் உள்ள சித்தார்த்தன் வீட்டுக்கு வந்தனர். அங்கு ஏற்கெனவே பூஜை செய்வதற்காக நல்லெண்ணெய், நெய், எலுமிச்சை பழங்கள், குங்குமம், திருநீறு பூக்கள் உள்ளிட்டவை தயாராக இருந்தன. இதேபோல் சித்தார்த்தனின் மகன் விஸ்வாமித்ரனும் (21) அங்கு இருந்தார்.
கைப்பையில் மல்லிகைப்பூ
இதைத்தொடர்ந்து சித்தார்த்தன், தனது மகனுடன் சேர்ந்து சில பூஜைகளை செய்தார். அவர்களுக்கு எதிரே அழகர்சாமியும், பொன்ரா ஜூம் அமர வைக்கப்பட்டனர். பூஜைகளை முடித்தபிறகு 2 பேரிடமும் சித்தார்த்தன் கைப்பை ஒன்றை கொடுத்தார். அந்த பையில் மல்விகைப்பூ வாசனை வந்தது.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற 2 பேரும், தங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைத்து விடும் என்ற ஆசையில் சித்தார்த்தன் கொடுத்த கைப்பையை திறந்து பார்த்தனர். ஆனால் அந்த பைக்குள் வெறும் மல்லிகைப்பூ மட்டுமே இருந்தது. அப்போதுதான் முருகேஸ்வரி உள்பட 3 பேரும் சேர்ந்து தங்களை மோசடி செய்தது அழகர்சாமிக்கும். பொன்ராஜூவுக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சித்தார்த்தன் வீட்டுக்கு சென்று, தங்களது பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர்.
தந்தை-மகன் கைது
அப்போது சித்தார்த்தனும். அவரது மகன் விஸ்வாமித்ரனும் சேர்த்து அவர்கள் 2 பேரையும் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாகத் தாக்கினர். மேலும் பணம் கேட்டு வந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த 2 பேரும், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, டி.கள்ளிப் பட்டியில் இருந்த சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விஸ்வாமித்ரனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த முருகேஸ்வரியை வலைவிசி தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சித்தார்த்தன் இது போன்று பலரிடம் மோசடி செய் திருப்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.